2 நாள் பயணமாக கோவை, திருப்பூர் வரும் முதல்வர் ஸ்டாலின்.. பின்னணியில் உள்ள காரணம் இதுதான்!
சென்னை: இன்றும் நாளையும் முதல்வர் ஸ்டாலின் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், உடுமலைப்பேட்டை அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இந்த பயணத்தின் போது ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஸ்டாலின் உடல்நலம் பெற்றுள்ள நிலையில், இன்று மாலை கோவை பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று மாலை 5.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஸ்டாலின், மாலை 6.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அப்போது 2 மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து மாலை 6.50 மணிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நரசிங்கபுரத்திற்கு புறப்பட்டுச் செல்லும் ஸ்டாலின், இரவு 8.50 மணிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்க உள்ளார். இதன்பின் இரவு உடுமலைப்பேட்டையில் தங்கும் ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு நேதாஜி மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் பகல் 12 மணியளவில் பொள்ளாச்சி வரும் முதல்வர் ஸ்டாலின், காமராஜர், விகே பழனிசாமி கவுண்டர் சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளைத் திறந்து வைக்கிறார். பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவரங்கத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
இதன்பின் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டப் பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாஹிரி வடிவத்தை ஸ்டாலின் பார்வையிட உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பகல் 12.15 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் கோவை திரும்புகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.10 மணிக்கு சென்னை திரும்ப உள்ளார்.












Click it and Unblock the Notifications