பள்ளிக்கல்விக்கு காமராஜர்! உயர்கல்விக்கு கருணாநிதி! ஒப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக மாணவர்கள் உலகிலேயே திறமையானவர்கள் என்ற பெயரை பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை புறநகரில் நடைபெற்ற தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும் அவர் அந்த விழாவில் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;
கல்குவாரி விபத்தில் 2 பேர் மரணம்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
நுழைவுத் தேர்வு
''தமிழ்நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில், அதாவது உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இப்போது 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த அரசு உயர்கல்வியில் முதலில் இருந்தே மிகுந்த கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கலைஞர் நுழைவுத் தேர்வை அன்றைக்கு ரத்து செய்தார். இன்றைக்கு தேசிய உயர்கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக, அதாவது 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்றால், அந்தப் பெருமை முழுமையும் யாருக்கு சேரும் என்று கேட்டீர்கள் என்றால், நம்முடைய கலைஞர் அவர்களுக்குத்தான் சேரும்.''
உச்சநீதிமன்ற அங்கீகாரம்
''பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை இரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அதற்காக உச்சநீதிமன்ற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் நேற்று சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னேன். பள்ளிக்கல்விக்கு பெருந்தலைவர் காமராசர் என்று சொன்னால் - கல்லூரிக்கல்விக்கு முத்தமிழறிஞர் கலைஞர் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.''
உயர்கல்விக்கு பொற்காலம்
''அந்த வகையில் உயர்கல்விக்கு இந்தக் காலம் பொற்காலமாக இருக்கும் என்று நேற்றைக்கு நான் அங்கே வலியுறுத்திச் பேசியிருக்கிறேன். இப்போது அதை இங்கே நான் வலியுறுத்துகிறேன். இங்கு வேந்தர் அவர்கள் பேசுகிறபோது, முதலமைச்சர் வந்திருக்கிற காரணத்தால் எல்லோரும் கோரிக்கை வைப்பார்கள், நான் கோரிக்கை வைக்க மாட்டேன் அப்படியென்று சொன்னார். ஆனால், இப்போது நான் அவருக்கு, முதலமைச்சர் என்ற முறையில் ஒரு கோரிக்கை வைக்க இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.''
மாணவர் சேர்க்கை
''உயர்கல்வியில் அகில இந்திய மாணவர் சேர்க்கை விகிதத்தைத் தாண்டி தமிழகம் முன்னணியில் நிற்பதற்கு பல காரணிகள் உண்டு. இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் ஆராய்ச்சித் துறைகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கிறது.''
நான் முதல்வன்
''உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் ஒரு திட்டத்தை அறிவித்து, அதைச் செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறேன். என்னவென்று கேட்டால், "நான் முதல்வன்"என்கிற அந்தத் திட்டம். அதாவது மாணவர்களுடைய திறமைகளை அதிகரித்து, தமிழக மாணவர்கள் சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர்களாக மாற வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம்.''