வேலை நேரத்தில் உணவருந்தினால் பணி நீக்கம்! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,500 சன்மானம்! எங்கு தெரியுமா?
சென்னை: ‛‛பணி நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் பற்றி தகவல் அளித்தால் ரூ.1,500 சன்மானம் வழங்கப்படும். ஒருவர் மீது 3 முறை புகார் வந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்'' என நிறுவனம் ஒன்று தனது அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்து உள்ளன. இந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் எழுதி சுவற்றில் ஒட்டப்பட்டு இருக்கும்.
பெரும்பாலான நிறுவனங்களில், வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு ‛‛காலனிகளை கழற்றி உள்ளே வாருங்கள், செல்போன் பேசாதீர்கள், எச்சில் உமிழாதீர்'' என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கும். அதேநேரத்தில் ஊழியர்களுக்கு ‛‛பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தாதீர், குடிநீர் குழாயை சரியாக மூடுங்கள், அலுவலக பொருட்கள் உங்கள் சொத்து கவனமாக பயன்படுத்துங்கள்'' என்பன போன்ற அறிவுரைகள் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வேகமாக பரவி வருகிறது. அதில், ‛‛பணி நேரத்தில் ஊழியர்கள் யாரும் உணவு சாப்பிடக்கூடாது. இதை மீறி உணவு சாப்பிடும் ஊழியர்கள் பற்றி தகவல் அளிக்கும் நபர்களுக்கு 20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,500) வழங்கப்படும். இவ்வாறு பிடிபடும் ஊழியர்களுக்கு 3 முறை எச்சரிக்கை வழங்கப்படும். அதன்பிறகும் தவறு நேர்ந்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்'' என கூறப்பட்டுள்ளது.
இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்தில் இருக்கும், இருந்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் கேலி செய்வதுடன் சிலர் விமர்சனமும் செய்கின்றனர். ‛‛இந்த அறிவிப்பு சகஊழியர்கள் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தலாம்'' என ஒரு தரப்பு கவலை தெரிவிக்கும் வேளையில், இன்னொரு தரப்போ ‛‛ஒவ்வொருவரும் மற்றொருவர் பற்றி தகவல் கொடுத்து ரூ.1500 சன்மானம் பெற்று மொத்தமாக பார்ட்டி செய்யலாம்'' என கிண்டலாக பதிலளித்து வருகின்றனர்.
இருப்பினும் அறிவிப்பு உள்ள நோட்டீஸில் சன்மானத்தின் மதிப்பு டாலர் மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த அறிவிப்பு நிச்சயமாக இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் அமலாக வாய்ப்பில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இந்த நடைமுறை இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.