ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்..ஈரோடு கிழக்கில் வேட்பாளர் வாபஸ்.. இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் ஓபிஎஸ்
அதிமுகவில் நீடித்த உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. தனது தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் தொடர்பாக அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன. நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக இருப்பதால் ஒ.பன்னீர் செல்வம் முகாமில் அடுத்தடுத்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஏற்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
அரசியல் களத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது அதிமுகவில் அரங்கேறும் சம்பவங்களைப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். கடந்த ஜூன் மாதம் வரைக்கும் அன்பு மலர்களே..தாய் வழி வந்த தங்கள் எல்லாம் ஓர் வழி சென்றால் நாளை நமதே... என்று பாடிக்கொண்டிருந்தனர். ஒற்றைத்தலைமை என்ற பேச்சு தொடங்கிய நாள் முதலே பிரச்சினை தொடங்கி விட்டது.

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பிரச்சினையை ஊதி பெரிதாக்கியது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் எம்எல்ஏக்கள்,எம்.பிக்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் நிற்க ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்து போனார் அவர் பக்கம் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட சிலர் சென்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினால் ஓ.பன்னீர் செல்வம் தனது சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி பலத்தை நிரூபிக்க முயற்சி செய்வார். இந்த நேரத்தில்தான் திருமகன் ஈவேராவின் திடீர் மரணத்தை அடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தனது தரப்பு வேட்பாளராக தென்னரசுவை அறிவிக்க, ஓ.பன்னீர் செல்வமோ, தனது தரப்பு வேட்பாளராக செந்தில் முருகனை அறிவிப்பு வேட்புமனுவையும் தாக்கல் செய்ய வைத்து விட்டார். அந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அவை எம்ஜிஆர் மாளிகைக்கு வந்தடைந்துள்ளன. அதே நேரத்தில் தமிழ் மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி குறித்து எதுவும் இல்லாததால், அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி அதிமுக அவைத்தலைவர் செயல்படவில்லை என்றும், இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம் என்றும் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்தது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். இன்று வேட்பாளர் யார் என்று இறுதி முடிவு செய்தால் மட்டுமே நாளைய தினம் வேட்புமனுவை அதிமுக சார்பில் தாக்கல் செய்ய முடியும். அதற்கு முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்திற்குப் பிறகு வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தருவதாகவும் வாக்குகள் சேகரிப்போம் என்றும் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications