ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு! பரபர தேர்தல் களம்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் காங்கிரஸின் திருமகன் ஈவேரா... இவர், கடந்த 4ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
எப்போதும் ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால்.. அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும். அதன்படி சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு வேட்பாளர் ரெடி.. முக்கிய ஆலோசனையில் 'டாப்’ தலையே ஆப்சென்ட்.. 2 நாளும்! இதுதான் காரணமா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அத்துடன் இங்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 27இல் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 2இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் போட்டி
வரும் ஜன. 31ஆம் தேதி முதல் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவிப்பதில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வு குறித்து கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், இது குறித்த அறிவிப்பைக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராகப் போட்டியிடக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அனுமதி அளித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்
சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில், தற்போது வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஆவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரான இவர், கடந்த 2004 முதல் 2009 வரையிலான காங்கிரஸ் கூட்டணி அரசியல் மத்திய ஜவளித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
ஒரே நாளில் மாறிய காட்சி
தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் காங்கிரஸ் சார்பில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. இருப்பினும், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் இன்றைய தினம் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.