“ஆளுநர் ரவி அரசமைப்பு சட்டத்துக்கே விரோதி.. தமிழகத்தை சீர்குலைக்க முயற்சி” - வரிந்துகட்டி வந்த காங்!
சென்னை : அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சீர்குலைக்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதாக தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
“இந்த விடியா அரசால் லாக்கப் மரணங்களை தடுக்கவே முடியாது” - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!
ஆளுநர் ரவி
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், சென்னை வானகரத்தில், 'ஹரிவராசனம்' பாடல் இயற்றப்பட்ட 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. அதுவே கடவுள். வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது." எனப் பேசினார்.
சனாதன தர்மம்
மேலும், "இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப் போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். மேலும், வல்லரசு நாடாக நாம் வளர்ந்துவரும் நிலையில், இங்கு தலைமைப் பதவியில் இருப்பவர்கள் ஆன்மீகத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவேண்டும்" எனப் பேசினார்.
கட்சிகள் கண்டனம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் இத்தகைய பேச்சுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மதவாத, சனாதன தர்ம, வருணாசிரம, வன்முறை கருத்துக்களை ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு கூறுவது நல்லதல்ல, சனாதனத்திற்கு ஆதரவாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல, வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்கு உரியது, ஆளுநர் தனது கருத்துக்களை திரும்ப பெற வேண்டும்" என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டார்.
காங்கிரஸ் கண்டனம்
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. நாட்டின் வளர்ச்சியைப் போல ஆன்மிக வளர்ச்சியும் அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சி" என்று கூறியதோடு நிற்காமல், "சனாதன தர்மத்தினால் தான் இந்தியா ஒளிர்கிறது" என்று வகுப்புவாத, பிற்போக்குத்தனமான கருத்துகளை அப்பட்டமாகக் கூறியிருக்கிறார். இதன்மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறியிருக்கிறார். அவரது உரை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மதச்சார்பற்ற கொள்கையைக் குழிதோண்டி புதைக்கிற வகையில் சட்டவிரோதமாக ஒரு ஆளுநரே பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதி
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு மட்டும் விரோதி அல்ல. அரசமைப்புச் சட்டத்துக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் விரோதமாகச் செயல்பட்டு, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்து வருவதை எவரும் அனுமதிக்க முடியாது. வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகிற கருத்துகளை ஆர்.என்.ரவி கூறுவதை இனியும் நிறுத்தவில்லை எனில், அவருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.