காங். கட்சி தலைவர் தேர்தல்.. தமிழகத்தில் சசி தரூருக்கு ஏமாற்றம்.. ஒரு சில நிர்வாகிகளே சப்போர்ட்
சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்டுள்ள சசி தரூர் தனக்கு ஆதரவு கேட்டு நேற்று தமிழகம் வந்திருந்தார். ஆனால் தமிழகத்தில் சுமார் 12 நிர்வாகிகள் மட்டுமே சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பழமையான கட்சியான காங்கிரசில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் இடையே நேரடி போட்டி உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒருவாரமே
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சியின் மேலிட தலைவர்கள் பலரின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே இதை யூகிக்கும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறின. ஆனால், மறுபக்கம் கட்சியின் மூத்த தலைவர்கள் யாருடைய ஆதரவும் பெரிய அளவில் இல்லாமல் சசி தரூர் போட்டிக் களத்தில் உள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒருவாரமே உள்ள நிலையில், கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரும் பணியில் இரு தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலும் ஏமாற்றமே
அந்த வகையில் சசி தரூர் நேற்று தமிழகம் வருகை தந்தார். சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட சசி தரூர் வந்தார். ஆனால், அவருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க 700 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தகுதி பெற்றவர்கள். ஆனால், சசிதரூருக்கு ஆதரவு அளித்த நிர்வாகிகள் எண்ணிக்கை சுமார் 12 மட்டுமே ஆகும்.

கேரளாவிலும் ஆதரவு இல்லை
ஏற்கனவே, சசி தரூருக்கு அவரது சொந்த மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க மறுத்துவிட்டது. கேரள காங்கிரஸ் தலைவரான கே சுதாரகன் வெளிப்படையாக கேரள காங்கிரஸ் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார். இது சசி தரூருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தமிழகத்திலும் சசி தரூருக்கு ஆதரவு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடிமட்ட தொண்டர்கள் ஆதரவு உள்ளது
சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் சசி தரூர் மரியாதை செலுத்தினார். அப்போது சில நிர்வாகிகளே உடன் இருந்தனர். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிதரூர், ''நான் வெற்றி பெற்றால் கட்சியை வலுப்படுத்துவேன். அடிமட்ட தொண்டர்கள் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications