பாஜகவின் “ஆபரேசன் தாமரை”.. ஹை “அலர்டில்” காங்கிரஸ்.. கர்நாடகாவில் இறக்கப்படும் பிறமாநில "கைகள்”
சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆபரேசன் தாமரையில் சிக்காமல் இருக்க, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரையும் கர்நாடகத்துக்கு வரவழைக்க அக்கட்சித் தலைமை முடிவு செய்து இருக்கிறது.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிட்டதன் காரணமாக கர்நாடகாவில் மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பான்மை பலத்துடன் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று தனித்து ஆட்சியமைக்கும் என்றே தெரிவித்தது.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி கர்நாடகாவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறாது என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறின.
இதன் காரணமாக அம்மாநிலத்தில் மீண்டும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்றுசில ஊடகங்கள் தெரிவித்தாலும், தொங்கு சட்டசபை அமையும் என்ற உள்ளிட்ட சில ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இந்த நிலையில்தான் இன்று காலை பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கர்நாடகா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பாஜகவே முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்து. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிலும் முதல் அரைமணி நேரம் மேல் பாஜகவே முன்னிலையில் உள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
அடுத்தடுத்த சுற்று முடிவுகளில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னேறி இருக்கிறது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 84 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 15 இடங்களில் வெற்றியும், 47 இடங்களில் முன்னிலையும் பெற்று உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களில் வெற்றியும் 21 இடங்களிலும் முன்னிலையும் வகித்து வருகிறது.
தற்போது காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், பாஜக கட்சி ஆபரேசன் தாமரையில் இறங்கும் வாய்ப்பு இருப்பதால் காங்கிரஸ் வெற்றிபெற்ற மற்றும் முன்னிலை வகிக்கும் எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக டெல்லி மற்றும் பிற மாநில காங்கிரஸ் தலைவர்களை கர்நாடகவில் இறக்கி எம்.எல்.ஏக்களை பாஜகவினர் நெருங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications