வேகம் காட்டும் அதிமுக.. பொதுக்குழுவிற்கு முன்.. நாளை மறுநாளே மா. செக்கள் கூட்டம்.. என்ன ப்ளான்?
சென்னை: ஜூன் 23ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நாளை மறுநாள் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு தவறாமல் பங்கேற்க அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த வகையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் கடந்த 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஆலோசனை
ஜூன் 23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது குறித்து நேற்று முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், செம்மலை, ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

புதிய பதவிகள் உருவாக்கம்?
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாலேயே பொதுக்குழு கூட்டம் தாமதமாக கூட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமாக அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, தலைவர் மற்றும் செயல்தலைவர் பதிவிகள் உருவாக்கப்படும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

யாருக்கு என்ன பதவி?
அப்படி தலைவர், செயல் தலைவர் பதவிகள் உருவாக்கப்பட்டால் யாருக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைவர் பதவியை ஓ.பன்னீர் செல்வத்திற்குன், செயல் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்தநிலையில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. அதில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள், கட்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications