தமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசிக்கிறார்.
சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் புதிய தளர்வுகளை அறிவிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் 1,859 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 023ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அரசு மேற்கொண்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பவே பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக உயரும் கொரோனா.. கவலை தரும் புதிய டேட்டா.. கவனம் மக்களே
திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் திறப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே இன்றைய ஆலோசனைக்கூட்டத்தில் தமிழகத்தில் பள்ளிக்கல்லூரிகள் எப்போது திறப்பது என்பது பற்றி முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா திரையரங்குகளை திறக்க அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.