2 டோஸ் தடுப்பூசி போட்டும் பாதிப்பு! திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதுவும் 2வது முறை!
சென்னை : திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்த நிலையிலும், இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பலத்த பொருளாதார இழப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது.
சுமார் மூன்று வருடங்களாக கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் நிலையில் மூன்றாவது அலை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்ற மாதம் வரை பாதிப்பு எண்ணிக்கை 50 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் சில நாட்களாக சிறிது சிறிதாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். மேலும் தமிழகத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் சில மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.

எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 686 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவிலிருந்து 257 பேர் குணமான நிலையில் 3951 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக நோய்த் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கனிமொழிக்கு கொரோனா
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சகோதரியும், திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருந்த நிலையிலும், இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2வது முறை பாதிப்பு
தற்போது அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கனிமொழி ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பதும், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கவச உடை அணிந்து கனிமொழி தனது வாக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications