இந்தியாவில் ஒரே நாளில் 62,336 பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதிய உச்சமாக 24 மணிநேரத்தில் புதிதாக 62,336 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 160 நாட்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 60 ஆயிரம் பேரை கடந்துள்ளது.
நோ மாஸ்க்
ஆம்! தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதேபோல், சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக 400 எண்ணிக்கையை தாண்டியுள்ளது கொரோனா. அதிகாரிகள் மீண்டும் கொரோனா தடுப்புப் பணிகளை முடுக்கிவிட்டாலும், எந்த கட்சி தொண்டர்களாக இருந்தாலும் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் தான் வருகின்றனர்.
நேரில் பார்க்க
குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, கமல்ஹாசன், சீமான் உள்ளிட்ட முக்கியமான தலைவர்களை பார்க்க, அவர்கள் வரும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலை மோதுகிறது. வாக்களிக்கிறார்களோ இல்லையோ, இவர்களை நேரில் பார்ப்பதற்காவே பெரும் திரளான கூட்டம் வருகிறது.
ஆளும் கட்சியே...
சமீபத்தில் தொண்டர்கள் மாஸ்க் அணியாததால், அதிமுக வேட்பாளர் 5000 அபராதம் காட்டிய சம்பவத்தை நாம் கண்டோம். ஆளும் அரசின் தொண்டர்களே இந்த நிலையில் இருந்தால், மற்ற கட்சித் தொண்டர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் தான் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் இடியாய் வந்து இறங்கியிருக்கிறது இச்செய்தி.
கொரோனா தொற்று
ஆம்! தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எப்போதும் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தும் சுதீஷுக்கே கொரோனா ஏற்பட்டிருக்கும் நிலையில், ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கிளைமேக்ஸ்
தேர்தல் பிரசாரத்தின் ஓப்பனிங் சீனிலேயே சுதீஷுக்கு கொரோனா ஏற்பட்டிருக்கும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் மீதமிருக்கும் நிலையில், வரும் நாட்களில் தான் அனைத்து கட்சிகளும் ஓய்வில்லாமல் சுற்றி சுற்றி பரப்புரை செய்யவிருக்கின்றனர். தேர்தல் பிரசார 'கிளைமேக்ஸே' இன்னும் எட்டாத நிலையில், அதற்குள் தங்களுக்கு இந்த கொரோனா 'கிளைமேக்ஸ்' வைத்துவிடுவோமோ என்று உள்ளூர கலக்கத்தில் உள்ளனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.
என்னென்ன நடக்கப்போகிறதோ
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'தேர்தல் பிரசாரங்களில் யாரும் மாஸ்க் அணிவதில்லை. இதுபோன்ற பிரசாரங்களால் கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது' என்று கூறியுள்ள நிலையில், தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ என்று அதிகாரிகள் முணுமுணுப்பதையும் நாம் கேட்க முடிகிறது.