செஸ் ஒலிம்பியாட் போட்டி.. கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை.. மருத்துவத்துறை கட்டுப்பாடு!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வரும் வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ள மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இதில் 187நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் மகளிர் பிரிவிலும் கலந்துகொள்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு கவுன்ட்டர்
இந்தப் போட்டியை நடத்த ரூ.92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொடரை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த சிறப்பு அதிகாரி தலைமையில் குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதேபோல் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறப்பு கவுன்ட்டர் திறக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

குரங்கு அம்மை எச்சரிக்கை
இதனிடையே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்மையில் சர்வதேச நாடுகளில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. வெளிநாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு தீவிரமாகியுள்ள நிலையில் , மத்திய அரசு குரங்கு அம்மை குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

செஸ் வீரர்களுக்கு சோதனை
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான சென்னை வரும் வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா மற்றும் குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ள மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது. அந்த பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்றும், ஒருவேளை பாசிட்டிவ் என்று தெரிய வந்தால் சிகிச்சை வழங்கவும் மருத்துவத் துறை திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குரங்கு அம்மை தொடர்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு
அதேபோல் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாட்டு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொரோனா மற்றும் குரங்கு அம்மை பாதிப்புகளை பொறுத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications