வாக்களிக்க ஆர்வம் காட்டாத கொரோனா நோயாளிகள் - 100% வாக்குப்பதிவு இலக்கு எட்டலையே
தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க கொரோனா நோயாளிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சிலர் மட்டுமே பிபிஇ உடை அணிந்து வாக்களித்தனர்.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. சென்னையில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த நிலையில் ஒரு சிலர் மட்டுமே ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்களித்தனர். கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தால்100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு முடிந்தது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ, கொரோனா தொற்று இருந்தாலோ, அல்லது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலோ தனியே வந்து மாலை 6.00 மணி முதல் 7.00 மணி முடிய உள்ள நேரத்தில், வாக்கு சாவடியில் கொடுக்கப்படும் கொரோனா கவச உடையை அணிந்து வாக்களிக்கலாம். என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 8,991 கொரோனா நோயாளிகளில் 17 பேர் மட்டுமே சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 24ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 60% மருத்துவமனைகளிலும், கொரோனா மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
100 சதவிகித வாக்குப்பதிவு இலக்கை எட்டும் வகையில் கொரோனா சிகிச்சை பெறுவோரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்தது. இதனால் தேர்தல் முடியும் கடைசி ஒருமணிநேரத்தில் 6 மணிமுதல் 7 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலான நோயாளிகள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.7 மணியளவில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
கொரோனா பாதித்த கனிமொழி எம்.பி பிபிஇ உடையுடன் வந்து வாக்களித்தார்
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுகவின் எம்.பி. கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார் கனிமொழி எம்.பி இதே போல அம்பத்தூர் சட்டசபைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் கொரோனா தடுப்பு உடையுடன் வந்து வாக்களித்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.