நாளை மறுநாள் முதல்.. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்- ராதாகிருஷ்ணன் அதிரடி
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 7ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க இப்போது கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பயம்
தமிழகத்தைப் பொறுத்தளவில் வைரஸ் பாதிப்பு படிப் படியாக ஏறிக்கொண்டே செல்கிறது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு சதவீதம் அதிகமாக இருப்பதை போல அதிக அளவுக்கு தமிழகத்தில் இல்லை என்ற போதிலும் கூட தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏறிக்கொண்டே செல்கிறது.
டெஸ்டிங், டிரேசிங், டிரீட்மென்ட்
3T அதாவது Testin, Tracing, Treatment, என்ற பார்முலாவை செயல்படுத்துகிறோம். அதிகப்படியாக பரிசோதனை செய்வது, ஒருவருக்கு நோய் வந்தால் அவருடன் தொடர்பு கொண்டவர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்வது, அவர்களை தனிமைப்படுத்துவது ஆகியவைதான் இந்த 3T.
7ம் தேதிக்கு பிறகு தீவிரம்
கட்டுப்பாடு பகுதிகளில் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவற்றை இப்போதும் செய்துதான் வருகிறோம். ஆனால் தேர்தல் நேரத்தில் வீட்டுக்கு வீடு சென்று பரிசோதனை செய்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். எனவே இதுவரை பணிகளை வீடு வீடுக்கு தீவிரப்படுத்தவில்லை.
7ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்
தடுப்பூசி பிரச்சாரம்
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட வாருங்கள் என்று பிரச்சாரம் செய்ய முடியவில்லை. 7ம் தேதி முதல் அந்த பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்படும். அதேநேரம், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது.
தீவிரமான தடுப்பு நடவடிக்கை
அதேநேரம், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்னும் அதிகப்படியான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, முழு கட்டுப்பாடு கொண்டுவரப்படும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பார்கள். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.