80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி : சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது
சென்னை: 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டாலும் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,மழை நீர் தேங்காமல் இருக்க உடனடி நடவடிக்கையாக மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள் தடுப்பூசி செலுத்த 044-2538 4520, 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 97 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,663ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 19,621 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக சரி செய்யப்பட்டது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது தற்போது இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் தினசரியும் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அரசு முகாம்களில் இதுவரை 2 கோடியே 56 லட்சத்து 47 ஆயிரத்து 875 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் போடப்பட்டுள்ளதை சேர்த்தால் இதுவரை 2 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் 3 கோடியை நெருங்க உள்ளோம். மொத்தம் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அந்த வகையில் 12 கோடி தடுப்பூசி தேவை 3 கோடி போட்டாலும் மேலும் 9 கோடி தடுப்பூசி தேவை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications