இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருமினால் எப்படி.. அதை தமிழில் செய்தால் நல்லாருக்குமே.. யோசிங்க!
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூன் ஒலிக்க துவங்கி உள்ளது
சென்னை: சில தினங்களாகவே யார் போன் செய்தாலும் இருமல் சத்தத்துடன் காலர் டியூன் ஒலிப்பதை கேட்க முடிகிறது.. இந்த காலர் டியூன் இந்தி & ஆங்கிலம் மொழிகளில் கேட்பதால் தமிழக கிராமப்புற மக்கள் சற்று குழப்பமும் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அலர்ட் செய்வதற்கான மத்திய அரசு எடுத்து கொண்ட விழிப்புணர்வுதான் இந்த காலர் டியூன் நடவடிக்கை!
சில நாட்களாக அமுங்கி கிடந்த கொரோனா வைரஸ் பீதி கடுமையான கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. உச்சக்கட்ட பாதுகாப்பிலும், தடுப்பு நடவடிக்கைகளிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. நம் நாட்டில் மட்டும் இதுவரை 39 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்கூல்கள் முதல் ஏர்போர்ட் வரை வைரஸ் பரவலுக்கு எதிரான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம், பிஎஸ்என்எல், ஜியோ போன்ற டெலிகாம் நெட்வொர்க்குகள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கஸ்டமர்கள்
யார் போன் செய்தாலும், இந்த வைரஸ் பாதிப்பு காலத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த காலர் டியூன் அதில் ஒலிக்கிறது. கஸ்டமர்களின் காலர் ட்யூன்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக மாற்றப்பட்டு இருக்கிறது. முதலில் இருமல் சத்தம் கேட்கிறது.. இதற்கு பிறகு ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.. அந்த காலர் டியூனில் சொல்லப்பட்டுள்ளதன் அர்த்தம் இதுதான்:
தும்மல், இருமல்
"நாம் தும்மும் போதும், இருமும் போதும் முகத்தில் கர்சிப் கொண்டு மறைத்துக்கொள்ள வேண்டும்... தொடர்ந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.. ஒருவருடன் பேசும்போதும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று உரையாட வேண்டும்.... இருமல், காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் பாதிக்கப்பட்டோர் யாரேனும் உங்கள் அருகில் இருந்தால் அந்த சமயத்தில் உங்களது கைகளை கொண்டு உங்கள் முகத்தையும் கண்களையும் கையோடு விட்டுவிடக்கூடாது... கைகளை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்... தேவைப்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுக வேண்டும்" என்பதுதான் இதன் அர்த்தம்.
காலர் டியூன்
தொலைதொடர்பு துறை எடுத்து வரும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை ஏற்கக்கூடியதே.. வரவேற்க கூடியதும்தான்.. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் காலர் டியூன் இருப்பது தமிழக மக்களுக்கு எப்படி புரிந்து கொள்ள முடியும்? என்ற சந்தேகம் எழுகிறது.. குறிப்பாக கிராமப்புறங்களில் இப்போது கிட்டத்தட்ட பெரும்பாலானோர் செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்தி, ஆங்கிலம்
செல்போன் வைத்து கொள்ளும் அளவுக்கு வசதியோ, அவசியமோ ஏற்பட்டுள்ளதே தவிர, அவர்களுக்கு இன்னும் ஆங்கிலம், இந்தி மொழிகளில் பரிச்சயம் இல்லை.. இந்த காலர் டியூனின் அர்த்தமும் விளங்கவில்லை.. சில நேரம் ஒருவருக்கு நம்பர் போட்டுவிட்டு, திடீரென இருமல் சத்தம் வரவும், செல்போனில் ஏதோ பிரச்சனை என்று நினைத்து கட் செய்து விடுகிறார்கள்.. அல்லது அதே நம்பருக்கு திரும்ப திரும்ப போன் செய்து குழப்பமடைகிறார்கள்.
விழிப்புணர்வு
முதலில், இது கொரோனா வைரஸுக்கான விழிப்புணர்வு காலர் டியூன் என்றுகூட பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே உள்ளது.. ஏற்கனவே கொரோனா வைரஸ் என்பது புரியாத நோய் அது.. பெயரை கேட்டாலே நடுங்கி வருகிறார்கள்.. இந்நிலையில், அதற்கான விழிப்புணர்வுகூட புரியாமல் இருந்து ஆங்கிலத்தில் மிரட்டுவதுதான் மேலும் கிலியை தருகிறது.
பிராந்திய மொழிகள்
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கஸ்டமர்களின் காலர் ட்யூன்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.. என்றாலும் இந்த முயற்சி முழுமையாக பயன் தர வேண்டுமானால், அனைத்து தரப்பினருக்கும் போய் சேர வேண்டுமானால் பிராந்திய மொழிகளில் இதனை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்... பல்வேறு மொழிகளில் வாழும் இந்திய நாட்டில் இடத்திற்கேற்ப மொழிகளில் இந்த காலர் டியூனை இடம்பெற செய்வது இப்படிப்பட்ட அபாயகரமான நேரத்தில் உடனடி அவசியம் ஆகும்... அதேபோல, தமிழில் தரப்பட்டுள்ள காலர் டியூனின் அர்த்தத்தை நாமும் ஒருவருக்கொருவர் பகிர்ந்தால் நல்லா இருக்கும்!