இன்று ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 969 பேர்... பலி 10 பேர்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 911-ல் இருந்து 969-ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 58 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.
இதேபோல் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9-ல் இருந்து 10-ஆக இன்று அதிகரித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதனிடையே தமிழகத்தில் 9,527 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கிவிட்ட நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் மிகத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாசிட்டிப் உறுதிசெய்யப்பட்ட 58 நபர்களில் 4 பேர் வெளிமாநில பயண வரலாறு உடையவர்கள் என்றும், அந்த 4 பேர் மூலம் எஞ்சியுள்ள 54 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பில் இருந்து இன்று யாரும் புதிதாக நலம்பெற்று வீடு திரும்பவில்லை என்றும், நேற்றைய நிலவரப்படி 44 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து நலம்பெற்றவர்கள் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.
தமிழகத்தில் 29000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தேவையெனில் அதனை அதிகரிக்க தனிக்குழு ஒன்று இயங்கி வருவதாகவும் தலைமைச்செயலாளர் தெரிவித்தார். இதனிடையே வழக்கமாக கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தானே வெளியிடுவார், கடந்த 2 நாட்களாக நீங்கள் வெளியிடுகிறீர்களே என அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை தொடர்பான விவரங்களை மட்டும் வைத்துள்ளார், தம்மிடம் பிறதுறைகள் சார்ந்த விவரமும் உள்ளதால் உங்களை சந்திக்கிறேன் என சிரித்தவாறு கூறினார்.
மேலும், கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், வேலூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுமதி பெறுவதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications