சென்னை முதல் மதுரை வரை.. இந்த 12 மாவட்டங்கள்தான் முக்கியம்.. ரொம்ப கவனம் தேவை.. முழு விபரம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மொத்தம் 12 மாவட்டங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மொத்தம் 12 மாவட்டங்கள் மிகவும் பாதுகாப்பாக, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. அதேபோல் இன்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.
மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். மீதம் இருக்கும் 14 பேரில் 13 பேர் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள். ஒருவர் மட்டும் மதுரையை சேர்ந்தவர், எந்த விதமான பயண வரலாறும் இல்லாதவர்.
12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் தமிழகத்தில் பின் வரும் 12 மாவட்டங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கன்னியாகுமரி, திருச்சி, ஈரோடு, திருநெல்வேலி, கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், மதுரை, சிவகங்கை உட்பட 12 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கண்டிப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ன காரணம்
இதற்கான காரணங்களும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 15 பேரும் ஏதோ ஒரு வகையில் இந்த மாவட்டங்கள் உடன் தொடர்பில் உள்ளனர். கொரோனா பாதித்த மக்கள் இந்த மாவட்டத்திற்கு சென்று உள்ளனர். அல்லது இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களை இவர்கள் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். இதுதான் இந்த 12 மாவட்டங்களை எச்சரிக்க முதல் காரணம்.
வீட்டில் தனிமையில் உள்ளனர்
அடுத்ததாக, இந்த 12 மாவட்டத்தை சேர்ந்த மக்கள்தான் அதிகமாக கொரோனாவிற்காக வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 3600 பேர் வீட்டில் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் 234 பேர் வீட்டில் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சியில் 492 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோட்டில் 450 பேர் வீட்டில் உள்ளனர்.
கன்னியாகுமரி எப்படி?
திருவாரூரில் 393 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.திருநெல்வேலியில் 384 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் 1044 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தஞ்சாவூரில் 775 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கோயம்புத்தூரில் 512 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை நிலை
புதுக்கோட்டையில் 493 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் சிவகங்கையில் 481 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். . ராமநாதபுரத்தில் 343 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினத்தில் 325 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் 325 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மக்கள் வீட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளனர்
இப்படி இந்த 12 மாவட்டங்களில்தான் மக்கள் வீட்டிற்க்குள் வைத்து அதிகமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் மூலம்தான் கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளது. அதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க மொத்தம் 12519 பேர் வீட்டில் இப்படி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூலம் கொரோனா பரவும்
தமிழகத்தில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவினால் அதற்கு இவர்கள்தான் காரணமாக இருப்பார்கள். இவர்கள் வெளியே சென்றால், அவர்கள் மூலம்தான் கொரோனா பரவும். அதனால்தான் இவர்கள் வீட்டில் அடையாளத்திற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. இவர்கள் வெளியே வர கூடாது என்பதாலும் வேறு வீட்டையே சேர்ந்த மக்கள் இவர்கள் வீட்டிற்கு உள்ளே வர கூடாது என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.