அக்டோபர், நவம்பரில் கொரோனா மேலும் அதிகரிக்கும்.. 2 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு- தமிழக அரசு தகவல்
சென்னை: அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா நோய்தொற்றுக்கு 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம், எனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வை இப்போதே நடத்துவதுதான் சரியானது என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, மாணவர்கள் உயிர் முக்கியம் என்பதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

திட்டமிட்டபடி தேர்வு
மேலும், காலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதியம் 2.30 மணிக்கு, தமிழக அரசு இது தொடர்பாக தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் கெடு விதித்தனர். பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று வாதம் முன் வைத்தார்.

தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம்
தமிழகத்தில் 2 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். 10ம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்று தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதம் முன்வைத்தார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யாருக்காவது, கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துபோக நேரிட்டால் அதற்கு பொறுப்பேற்பது யார் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அக்டோபர், நவம்பர் மாதம்
தலைமை வழக்கறிஞர் மேலும் கூறுகையில், தேர்வை பிறகு நடத்துவது ஆபத்தானது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே இது தான் தேர்வு நடத்தும் சரியான நேரம் என்று வாதிட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிகரிப்பு
தமிழகத்தில் வைரஸ் தொற்று விரைவில் ஒழிக்கப்பட்டு, மாநிலம் சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு தலைமை வழக்கறிஞர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனா நோய் தொற்று அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதும், அதுவும் லட்சக்கணக்கில் குறிப்பிட்டுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications