கைதட்டினால் கொரோனா சாகுமா?.. ஹெலிகாப்டரில் இருந்து மருந்து தூவுவார்களா? பரவும் செய்தி.. உண்மை என்ன?
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக இணையத்தில் நிறைய வதந்திகள் பரவி வருகிறது. இது தொடர்பான உண்மை என்ன? பின்னணி என்ன? என்று விளக்கங்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் மக்களை தாக்க தொடங்கியது. சீனாவில் வுஹன் நகரத்தில்தான் இந்த வைரஸ் முதலில் மக்களை தாக்கியது. அதன்பின் சீனாவில் வேகமாக பரவிய இந்த வைரஸ், தற்போது உலகம் முழுக்க 180க்கும் அதிகமான நாடுகளுக்கு வைரஸ் பரவி உள்ளது.
உலகம் முழுக்க இந்த வைரஸ் எப்படி வேகமாக பரவி வருகிறதோ அதேபோல் இந்த வைரஸ் தொடர்பான வதந்திகளும் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதை விட, இந்த வைரஸ் தொடர்பான வதந்திகளை கட்டுப்படுத்துவதுதான் மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது.

இந்தியா எப்படி
இந்தியாவிலும் கூட கொரோனா வைரஸ் தொடர்பாக நிறைய வதந்திகள் பரவியது. முக்கியமாக ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் குணமாகும். சிக்கன், மட்டன் சாப்பிட்டால் கொரோன வைரஸ் குணமாகும். வெயிலில் 12 நிமிடம் நின்றால் கொரோனா வைரஸ் குணமாகும் என்று செய்திகள் பரவியது. இது எல்லாம் பொய்யான வதந்தி என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது.

மோடி பேச்சு
அதன்பின் பிரதமர் மோடி, இன்று எல்லோரும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும். 14 மணி நேரம் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவில் தற்போது இந்த மக்கள் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது .

என்ன வதந்தி
மோடியின் இந்த பேச்சை தொடர்ந்து நிறைய வதந்திகள் பரவியது. அதில் முதல் வதந்தி, 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் சாகும் என்பது. அந்த வதந்தியில், கொரோனா வைரஸின் ஆயுட்கலாம் 12 மணி நேரம்தான். மக்கள் ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரம் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும். 14 மணி நேரம் மக்கள் உள்ளேயே இருப்பார்கள் என்பதால் கொரோனா வைரஸால் பரவ முடியாது. அதன் தொடர்பு இழக்கப்படும். 14 மணி நேரத்திற்கு பின் இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கும், என்று வதந்தி பரவியது.

உண்மை என்ன
ஆனால் கொரோனா வைரஸ் அத்தனை எளிதாக சாக கூடியது இல்லை. மனித உலக வரலாற்றில் தோன்றிய மோசமான வைரஸ்களில் இந்த வைரஸும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் குளிரான இடங்களில் 10 நாட்கள் வரை கூட வாழும். கொரோனா வைரஸ் ஸ்டீல் கம்பிகளில் 3 நாட்கள் வரை வாழும். அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களில் 4 நாட்கள் வரை வாழும். குளிர் அதிகம் இருந்தால் இதன் வாழ்நாள் அதிகரிக்கும்.
|
ரஜினி உட்பட பலர்
ஆனால் இது தெரியாமல் நடிகர் ரஜினிகாந்த் 12 நாளில் கொரோனா சாகும் என்ற வதந்தியை வீடியோவில் பேசி பகிர்ந்து இருந்தார். அதன்பின் இவர் பேசிய வீடியோ வதந்தி என்பதால் டிவிட்டர் நிறுவனம் அதை நீக்கியது. இதே செய்தியை கொஞ்சம் கூட மாறாமல் பாஜக தமிழக தலைவர் எல். முருகன் ஷேர் செய்து இருக்கிறார். கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இறந்து விடும். இதுதான் 14 மணி நேரம் ஊரடங்கு பிறப்பிக்க காரணம் என்று எல். முருகன் தனது டிவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார். இது வதந்தி என தெரிந்தும் இன்னும் அவர் டெலிட் செய்யவில்லை.

வேறு வதந்தி
அதேபோல் பிரதமர் மோடி, தனது பேச்சில், ஞாயிற்றுக் கிழமை மாலை மக்கள் எல்லோரும் 5 மணிக்கு தங்கள் கதவு அருகே, அல்லது பால்கனி அருகே வந்து கை தட்ட வேண்டும். நாடு முழுக்க சைரன் ஓலிக்க வேண்டும். கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் கைதட்ட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சொன்னார்கள்
இதையடுத்து மக்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி கைதட்டினால் கொரோனா வைரஸ் சாகும் என்று இன்னொரு வதந்தி பரப்பப்பட்டது. அதாவது மக்கள் எல்லோரும் சேர்ந்து மாலை நேரத்தில் கைதட்டினால் அதன் மூலம் ஒரு ஒலி உண்டாகும். இதன் மூலம் ஒரு அதிர்வு ஏற்பட்டு நம்மை சுற்றி உள்ள வைரஸ்கள் சாகும். கோவில்களில் இதனால்தான் மணி எழுப்பி சத்தம் உண்டாக்குகிறார்கள்.
|
மிக மோசம்
அதேபோல் கைதட்டினால் உடலில் புத்துணர்வு ஏற்பட்டு, அதன்மூலம் உடலில் வைரஸ்கள் சாகும். பாக்டீரியாக்களை இது கொல்லும் என்று வதந்தி பரப்பப்பட்டது. இது இணையம் முழுக்க பரவி வருகிறது. இந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்பது குறிப்பிடத்தக்கது. 5 நிமிடம் தொடர்ந்து கைதட்டினால் 3 நிமிடத்திற்கு பின் கைதான் வலிக்கும். ஆனால் வைரஸ் எல்லாம் சாகாது. தேவையில்லாத விஷயங்களை மக்கள் நம்ப வேண்டாம்.

இன்னொரு வதந்தி
அதேபோல் இன்னொரு வதந்தியும் இதை மையமாக வைத்து பரவியது. நாம் 14 மணி நேரம் வீட்டிற்குள் இருப்போம். அப்போது பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நாடு முழுக்க மருந்து தெளிக்கப்படும். ஹெலிகாப்டர் மூலம் பூச்சு கொல்லி மருந்து தெளிக்கப்படும். இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. நாடு முழுக்க இதன் மூலம் கொரோனா வைரஸ் சாகும் என்று செய்திகள் வெளியானது.

உண்மை என்ன
பாஜகவினர் பலர் இந்த செய்தியை பரப்பினார்கள். ஆனால் மத்திய அரசிடம் அப்படி திட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் மூலம் நாடு முழுக்க இப்படி பூச்சு மருந்து எல்லாம் முடியாத காரியம். இது முட்டாள்தனமான வதந்தி. இது தொடர்பாக மத்திய அரசின் செய்தி தொடர்பு நிறுவனமே விளக்கம் அளித்துவிட்டது. இது முழுக்க முழுக்க வதந்தி என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது .












Click it and Unblock the Notifications