டெல்டாவை விட "டேஞ்ஜர்" ஓமிக்ரான்.. வேக்சின் போட்டாலும் வருமா? தப்பிப்பது எப்படி? கேள்விகளுக்கு பதில்
சென்னை: உலகம் முழுக்க கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில்தான் தற்போது ஓமிக்ரான் வகை கொரோனா காரணமாக மக்கள் இடையே பெரிய அளவில் அச்சம் குடிகொண்டுள்ளது. உலக நாடுகள் எல்லாம் ஓமிக்ரான் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கொண்டு வந்தவண்ணம் இருக்கின்றன.
Recommended Video
தென்னாப்பிரிக்காவில் போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை உருமாறிய கொரோனா ஏற்கனவே உருமாறிய பல வகை கொரோனாவின் கலவையாக இருக்கிறது. மொத்தம் 50 உருமாற்றங்கள் இந்த ஓமிக்ரான் கொரோனாவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஓமிக்ரான் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
ஓமிக்ரான் கொரோனாவில் ஏற்பட்டுள்ள 50 வகையான மாற்றங்கள் காரணமாக அதை கவலை அளிக்க கூடிய வகையாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மிக மிக அச்சம் அளிக்க கூடியது, ஆபத்தானது என்று ஓமிக்ரான் குறித்து உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
பெயர் காரணம்
இந்த நிலையில் ஓமிக்ரான் கொரோனா குறித்து கொரோனா வல்லுனரும், மருத்துவருமான சந்திரகாந்த் லஹாரியா பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், பொதுவாக உருமாறிய கொரோனாவிற்கு பாங்கோ (Pango - Phylogenetic Assignment of Named Global Outbreak) என்ற அமைப்புதான் பெயர் வைக்க வேண்டும். ஆனால் உலக சுகாதார மையம் கடந்த மே மாதத்தில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு கிரேக்க எழுத்துக்களை வைத்து பெயர் வைக்க தொடங்கி உள்ளது. உருமாறிய கொரோனா கண்டறியப்படும் நாடுகளை வைத்து கொரோனாவின் பெயரை அழைப்பதை தவிர்க்கும் வகையில் இந்த கிரேக்க எழுத்து பெயர் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
டெல்டா
இதனால்தான் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. கிரேக்க எழுத்துக்கள் 24 உள்ளன. இதில் 15வது எழுத்துதான் ஓமிக்ரான். இதற்கு முன் நியூ (nu) மற்றும் ஸீ (xi) உள்ளது. ஆனால் நியூ மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். ஸீ சில நாடுகளை குறிக்கும் என்பதால் இரண்டு எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டு நேரடியாக ஓமிக்ரான் என்ற கிரேக்க எழுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாற்றம்
ஓமிக்ரான் கொரோனாவில் மொத்தம் 50 மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதில் 32 ஸ்பைக் புரோட்டின் மாற்றங்கள். 10 வேறு தனிப்பட்ட ஜீன் மாற்றங்கள். இந்த மாற்றங்கள்தான் கவலை அளிக்கின்றன. ஆல்பா, பீட்டா, மியூ, காமா போன்ற பல்வேறு வகை உருமாறிய வைரஸ்களில் காணப்பட்ட மாற்றம் இதிலும் காணப்படுகிறது. P681H, N679K, N501Y போன்ற உருமாற்றங்கள் இதிலும் உள்ளது. அதாவது பல உருமாறிய கொரோனா வைரஸ்களின் கலவையாக இந்த புதிய B.1.1529 உள்ளது. ஓமிக்ரான் எவ்வளவு ஆபத்தானது என்பது போக போக ஆராய்ச்சிகளுக்கு பின்புதான் தெரியும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எஸ்கேப்
ஆனால் இதன் nsp6 ஜீன் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வகையான கொரோனா புரோட்டீன் ஜீன் மாற்றம் ஆகும். இதனால் ஓமிக்ரான் கொரோனாவிற்கு எதிர்ப்பு சக்தியில் இருந்து எஸ்கேப் ஆகும் திறன் உள்ளது. அதேபோல் R203K மற்றும் G204R ஆகிய உருமாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இதுவும் ஓமிக்ரான் பரவும் வேகத்தை அதிகரிக்கும். இதன் காரணமாகவே ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை விட ஆபத்து கொண்டதாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
காம்பினேஷன்
இப்போதே தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நேரத்தில் பல உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் இது டெல்டா அளவிற்கு மரணங்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது தனி தனியாக டெல்டா, பீட்டா இதெல்லாம் ஆபத்தானது. ஆனால் இந்த உருமாற்றங்கள் எல்லாம் சேர்ந்து ஒரே கொரோனாவில் காணப்படும் போது அதே ஆபத்து அந்த கொரோனாவிற்கு இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. டெல்டா, பீட்டா உள்ளிட்ட பல உருமாற்றங்களின் கலவையாக இருக்கும் ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.
மக்கள் தப்பிக்கலாமா?
இதன் முழுமையான பாதிப்பை 3-4 வாரங்கள் கழித்துதான் அறிந்து கொள்ள முடியும். முழுமையான ஆராய்ச்சிக்கு பின்பே இது எவ்வளவு மரணங்களை ஏற்படுத்தும், எவ்வளவு மோசமான அறிகுறிகளை தரும் என்று தெரிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட வகையில் பொதுவாக ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வரும் வாய்ப்பு உள்ளது. இது ஓமிக்ரான் என்று இல்லாமல் எல்லா வகையான கொரோனாவிலும் சாத்தியம்தான்.
மீண்டும் வருமா
கொரோனா நோய் பாதிப்பிற்கு பின் இயற்கையாக கிடைக்கும் எதிர்ப்பு சக்தி சில நாட்களுக்குதான் இருக்கும். இது ஓமிக்ரான் வகை கொரோனா என்று இல்லாமல் அனைத்திற்கும் பொருந்தும். மீண்டும் ஒரே நபருக்கு கொரோனா ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் என்ன ஏற்கனவே கொரோனா வந்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியால் இரண்டாவது முறை, மூன்றாவது முறை அதன் வீரியம் குறைவாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படாது ஓமிக்ரான் கொரோனாவிற்கும் இது பொருந்தும்.
வேக்சின்
வேக்சின் பொதுவாக ஓமிக்ரான் என்று இல்லாமல் எந்த வகையான கொரோனாவிற்கு எதிராகவும் 100 சதவிகித எதிர்ப்பு ஆற்றலை கொண்டு இல்லை. இருப்பினும் ஓமிக்ரான் கொரோனாவிற்கு அதிக இம்யூன் எதிர்ப்பு உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஸ்பைக் புரோட்டினிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வேக்சின் எப்படி ஓமிக்ரான் வைரசுக்கு எதிராக செயலாற்றும் என்பது போக போகவே தெரியும். இப்போதே வேக்சினுக்கு எதிரான முடிவுகளை அறிவிக்க முடியாது. மாடர்னா போன்ற எம்ஆர்என் வகை வேக்சின்கள் இதற்கு எதிராக குறைந்த திறன் கொண்டு இருக்கலாம்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்
இதற்கு முன் பீட்டா, லாம்டா போன்ற வகை கொரோனா உருவான போது இதே அளவிலான அச்சம் எழுந்தது. இரண்டும் பல நாடுகளுக்கு பரவியது. ஆனாலும் கூட பெரிய அளவில் இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. டெல்டா அளவிற்கு மரணங்களை இரண்டும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் ஓமிக்ரான் கொரோனா வைரஸும் சீரியஸ் பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். தென்னாப்பிரிக்காவில் இதுவரை அதிக கேஸ்கள் வந்தாலும் சீரியஸ் பாதிப்பு இல்லை. இந்தியாவில் எல்லை கட்டுப்பாடு விதிகள், பயண கட்டுப்பாடுகள், தீவிர கணிப்புகளை அதிகரிக்க வேண்டும்.
தப்பிக்க என்ன செய்ய வேண்டும்
மக்கள் தனிப்பட்ட வகையில் மீண்டும் தீவிரமாக மாஸ்க் அணிய வேண்டும். வேக்சின் போடாதவர்கள் வேக்சின் போட வேண்டும். இரண்டாவது டோஸ் தேதி வந்துவிட்டவர்கள் உடனடியாக அதை போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல் சமூக இடைவெளி விட வேண்டும். பொதுவாக கொரோனாவிற்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக கடைபிடித்தால் ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது, என்று கொரோனா வல்லுனரும், மருத்துவருமான சந்திரகாந்த் லஹாரியா தெரிவித்துள்ளார்.