ஒரு பக்கம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. மறுபுறம் தலைவிரித்தாடும் கொரோனா.. தத்தளிக்கும் தமிழக மக்கள்
தமிழகத்தின் மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இதனால் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த எத்தனையோ முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்ற நிகழ்வுகள் நடந்தன.
கொரோனா பெருந்தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. இது மிகவும் ஆபத்து என்றும் சொல்கிறார்கள்.. முதல் அலையைவிட இந்த 2-ம் அலையின் வேகம் பன்மடங்கு என்கிறார்கள்..
நாடு முழுவதும் தீயாய் பரவும் கொரோனா - ஒரே நாளில் 2,34,692 பேர் பாதிப்பு - 1341 பேர் மரணம்
இந்த தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... எனவே, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
திருவிழா
இதற்காகவே, கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் சிறப்பு தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தியது.. இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.. கிராம பகுதிகளில் இருந்து காலை முதலே முதியவர்கள் ஆஸ்பத்திரி வளாகங்களில் குவிய தொடங்கினர்.. வெயிலையும் பொருட்படுத்தாது மக்கள் குவிந்தது நல்ல விழிப்புணர்வின் அடையாளமாகவே தென்பட்டது.
ஏமாற்றம்
ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. எத்தனையோ இடங்களில் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்றார்கள்.. இதனால் அதிருப்திகள் எழுந்தன.. வாக்குவாதங்கள் முற்றின.. பலர் கால்கடுக்க காத்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்த நிகழ்வுகளும் தமிழகத்தில் அரங்கேறின. ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 7.41 லட்சம் டோஸ் கோவிஷீல்டும், 1.75 லட்சம் டோஸ் கோவாக்சினும் இருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.. எனினும், பல மாவட்டங்களில் இந்த தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு 400-600 அளவு டோஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் வெள்ளிக்கிழமை மதியானத்துக்கு மேல், இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.. பெரும்பாலான மையங்களில் வயதானவர்கள் முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஊட்டி
அதேபோல நீலகிரி மாவட்டத்திலும் தடுப்பூசிகள் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது... ஊட்டியில் உள்ள விஜயா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் விஜயராஜ் சொல்லும்போது, இப்போது தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது.. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அரசிடமிருந்து தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றார்.
தீர்ந்துவிட்டன
நீலகிரி மாவட்டத்தில், 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. நேற்று காலை சுமார் 1 மணி நேரம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு மருந்துகள் தீர்ந்துவிட்டன. நாளை முதல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்" என்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் பல மையங்களிலும் இதே பிரச்சனை ஏற்பட்டது... தர்மபுரி, நாமக்கல், மாவட்டங்களிலும், இதே தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும், விரைவில் அங்கு கூடுதல் சப்ளை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10,000 கோவிஷீல்ட் டோஸ்கள் கடந்த வெள்ளியன்று கிடைத்துள்ளது.. அவை முக்கிய தடுப்பூசி மையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. எனினும் சில மையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்துள்ளது..
நெல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 86 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்த முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் முகாமில் கடந்த ஒருவாரமாக தினமும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் நேற்று 30 நபர்களுக்கு மட்டுமே செலுத்துவதற்கான மருந்து இருப்பு இருந்திருக்கிறது.. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கண்ணீர்
நெல்லையில், இப்படித்தான், ஒரு மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் திரண்டிருந்தனர்.. அதில் ஒரு பெண்மணி கண்ணீருடன் இருந்தார்.. அவர் பெயர் வள்ளியம்மாள்.. "எனக்கு ரத்த அழுத்தம் டெஸ்ட் பண்ணினாங்க.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னாங்க.. நானும் காத்திருந்தேன்.. ஆனால் ஊசி எனக்கு போடல.. மத்தவங்களும் போட்டாங்க.. அரை மணி நேரம் வெயிட் பண்ணியபிறகு, இப்போ ஸ்டாக் இல்லை, நாளைக்கு மறுபடியும் வர சொன்னாங்க என்றார். இப்படி தடுப்பூசி தட்டுப்பாட்டினால் தமிழக மக்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர்.