மனைவியின் கண்ணீர்.. சென்னை டாக்டரின் உடல் மீண்டும் எடுக்கப்படுமா.. முறைப்படி அடக்கம் செய்யப்படுமா?
உயிரிழந்த டாக்டரின் மனைவியின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா?
சென்னை: "ஒருவேளை நான் திரும்பி வரலேன்னா என்னை நம்மை முறைப்படி அடக்கம் பண்ணிடுங்கன்னு என் கணவர் சொன்னாரு.. அவரை சீல்டு செய்த சவப்பெட்டியில்தான் புதைக்கப்பட்டிருக்கு.. அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைகளில் அடக்கம் பண்ண வேண்டும்.. இது என் கணவரின் கடைசி ஆசை.. நிறைவேற்றுங்க ஐயா" என்று தமிழக முதல்வருக்கு கொரோனால் உயிரிழந்த சென்னை டாக்டரின் மனைவி, கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்குமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!
Recommended Video
தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்துதான் இன்னும் மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த வைரஸுடன் தினம் தினம் போராடி கொண்டுதான் டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர். அந்த அபாயத்தின் உச்சமாகதான் சென்னை டாக்டர் பாதிக்கப்பட்டு, 2 தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, கொரோனாவைரஸ் தங்களுக்கும், தங்கள் பகுதிக்கும் வேகமாக பரவி விடும் என்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், வேலப்பன்சாவடியில் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

கண்ணீர்
இந்த செயலின் அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. இந்த நிலையில்தான் டாக்டரின் மனைவி கண்ணீருடன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "என் பெயர் ஆனந்தி.. என் கணவர் கடந்த 19-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்துட்டாங்க.. அவங்களை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் பண்ண ஃபாதர் பெர்மிஷன் தந்தார்.. ஒருசில சம்பவத்தின் காரணமாக வேலப்பன்சாவடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டார்.

அடக்கம்
புதைக்கப்படும்போதுகூட எங்க கண்ணால் அதை பார்க்கிறதுக்கு முடியல.. என் கணவரை வெண்டிலேட்டரில் போடுவதற்கு முன்னாடி என்கூடயும், பிள்ளைங்களோடயும் வீடியோகாலில் பேசினாரு.. ஒருவேளை நான் திரும்பி வரலேன்னா என்னை நம்மை முறைப்படி அடக்கம் பண்ணிடுங்கன்னு சொன்னாரு.. என் கணவரை ஷீல்டு செய்த சவப்பெட்டியில்தான் புதைக்கப்பட்டிருக்கு.

கோரிக்கை
அதை அப்படியே எடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறைகளில் அடக்கம் பண்ணினால் எந்த தொற்றுமே பரவாது.. மாண்புமிகு முதலமைச்சரிடம் பணிவோடு நான் கேட்கிறேன் ஐயா. என் கணவருடைய கடைசி ஆசையை நிறைவேத்துங்க" என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்த வீடியோ பலரால் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து முதல்வர் இந்த கோரிக்கைக்கு செவிசாய்ப்பாரா, மறு அடக்கம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

உணர்வுகள்
மருத்துவரை அடக்கம் செய்யப்பட்ட பிறகும், இந்த விவகாரம் இந்த விவகாரம் பெரிதாக எதிர்பார்க்கப்படுவதற்கு காரணம் மத ரீதியான உணர்வுகள் இதில் அடங்கி உள்ளதால்தான்!! அடக்கம் செய்ய விடாமல் தடுத்தது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் வேறு பிரிவினை சேர்ந்தவர்கள்.. டாக்டர் ரோமன் கத்தோலிக்கை சேர்ந்தவர்கள் என்றும் , எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சிஎஸ்ஐ சர்ச்சை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.. சபைக்கான மயானத்தில் ஒருவரை அடக்கம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விலை, சந்தா போன்றவைகள் கூட நடைமுறையில் உள்ளதாக தெரிகிறது. இதுதான் மிகப்பெரிய முரணாகவும் இவர்களுக்குள் வெடித்துள்ளது.

கிறிஸ்தவர்கள்
எனினும் இந்த விஷயத்தை 2 விதமாக அணுகலாம்.. முதலாவதாக உணர்வுபூர்வமாக இதை பார்த்தோமானால், கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கல்லறையில்தான் அடக்கம் செய்வது வழக்கம்.. வேலங்காடு மயானம் ஒரு சுடுகாடு... அங்கு எந்த கல்லறையும் கிடையாது... அங்கு புதைப்பதற்கு பதிலாக உடலை எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தால் தான் டாக்டரின் ஆன்மா சாந்தியடையும்" என்பது அவரது குடும்பத்தாரின் கோரிக்கை. தன்னலம் பாராமல், ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உழைத்த டாக்டருக்கு இந்த உதவியை செய்தால் தவறு ஒன்றும் இல்லை, அது அவரது கடைசி ஆசையும் என்று அவரது மனைவியும் கண்ணீருடன் கேட்டிருப்பதால், அதை நிறைவேற்றுவதினால் ஒன்றும் மாபெரும் தவறில்லை என்று சொல்ல தோன்றுகிறது.

தவறில்லை
மேலும் இறந்த உடல் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு, அதன் வெளியே மரப்பெட்டி வைத்து அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது... அதை அப்படியே வெளியே எடுத்து இன்னொரு இடத்துக்கு மாற்றி அடக்கம் செய்தால், அதில் எந்த தொற்றும் ஒருபோதும் ஏற்படாது என்று டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.. அதனால் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியதே!!

குவியல்கள்
அதே சமயம், உலகம் போகும் போக்கில், கொத்து கொத்தாக செத்து மடியும் நிலையில், புதைக்க இடமில்லாமல் இறந்தவர்களை குவியலாக குவியலாக போட்டு அடக்கம் செய்து வருகிறது வல்லரசுகள்.. காலங்காலமாக கிறிஸ்தவத்தில் ஊறித் திளைத்தவர்கள் மேலை நாட்டினர்.. அவர்களுக்கே இன்று முறையான அடக்கம் இல்லாமல் ஒரே குழியில் எல்லாரையும் போட்டு புதைத்து கொண்டுள்ளனர்.

மயானம்
நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லை என்றாலும், உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, மரித்தபின்பும் எல்லாரும் சமம் என்பதைதான் மேலைநாடுகளின் அடக்கம் செய்யும் முறை நமக்கு உணர்த்தி வருகிறது... அது மட்டுமல்ல, டாக்டரை புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததே மற்றொரு பிரிவினர் என்கிறபோது இந்த விவகாரத்தில் பிரச்சனை மயானத்தில் இல்லை, மனிதர்களிடம்தான் உள்ளது!!

அர்ப்பணிப்பு
எனினும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட டாக்டர் குடும்பத்தினரிடம் எதையும் வலியுறுத்தி திணிப்பது தவறு.. மனிதாபிமான அடிப்படையில், சுயநலம் இல்லாமல் அர்ப்பணிப்பை வழங்கியதற்காகவும், மிக மோசமான முறையில் அவரது அடக்கம் நடந்தது என்பதற்காகவும், டாக்டரின் கடைசி ஆசையை உணர்வுப்பூர்வமாக அணுகினால் நல்லது என்றே சொல்ல தோன்றுகிறது!!












Click it and Unblock the Notifications