சென்னையில் கவலைத்தரும் வகையில் லேசாக அதிகரிக்கும் கொரோனா: எச்சரிக்கும் நிபுணர்
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையில் லேசாக அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 3ஆம் அலை பரவல் குறித்து எச்சரிக்கைகள் வரத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கொரோனா பரவல் உயர்ந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் குறையாமல் உள்ளது. கொரோனாவின் பிடியில் நாட்டு மக்கள் சிக்கியுள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக இயல்புநிலை திரும்பாமல் உள்ளது. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
கொரோனா முதல் அலையில் ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். இரண்டாம் அலையில் லட்சங்களில் பாதிப்பு ஏற்பட்டது கொத்துக்கொத்தாக மக்கள் மரணமடைந்தனர். 5 லட்சம் பேர் வரை இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

அலட்சியம் ஆபத்து
கொரோனா முடிவுக்கு வரவில்லை என்பதால் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் அதை அலட்சிப்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். முக கவசம் அணிவதை பலரும் தவிர்த்து விட்டே ஊர் சுற்றுகின்றனர். வணிக வளாகங்களில் சாமான்கள் வாங்கவும், மீன் இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இன்று குவிந்து வருகின்றனர். பல கடைகளில் சானிடைசர் வைப்பதில்லை. முக கவசம் அணியாமல் சென்றாலும் கடைக்குள் அனுமதிக்கின்றனர்.

படிப்படியாக குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் முதல் அலையில் ஒருநாள் பாதிப்பு 7 ஆயிரமாக இருந்தது, அதுவே இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் பதிவானது. மே மாதத்தில் இருந்து கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று 1,544 பேருக்கு புதிய தொற்று ஏற்பட்டுள்ளது.

மெல்ல உயரும் கொரோனா
சென்னையில் மட்டும் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக 160 பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்து வந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி 194 பேராக தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளதாக நிபுணர் விஜய் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. மருத்துவமனையில் 1816 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத்தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 24 மாணவ, மாணவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட, தொடர்புடைய அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது, பள்ளியை தற்காலிகமாக மூடுவது, கிருமிநாசினி கொண்டு பள்ளிகள், வளாகம் போன்றவற்றை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தொடரும் பரிசோதனை
சென்னை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள அந்தப்பள்ளி மூடப்பட்டது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாணவருக்கு தொற்று பரவியதால் அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. இதே போல சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 103 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. . பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளிகளை மூடி அனைவருக்கும் பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.

நிபுணர்களுடன் ஆலோசனை
ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஒரு சதவீதம் உள்ள பகுதிகளில் மட்டும்தான் தொற்று பதிவாகி இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு பதிவாகி இருக்கும் தொற்றுக்கூட, பள்ளியில் இருந்து ஏற்படவில்லை என்றும், வெளியில் இருந்துதான் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாதிப்பு அதிகமானால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா 3வது அலை
கொரோனா 3ஆம் அலை வரலாம் என நிபுணர்கள் எச்சரித்த நிலையில் மகாராஷ்டிராவில் 3வது வந்து விட்டதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் தளர்வுகள் அறிவித்த கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மூன்றாம் அலையை எதிர்நோக்கி முன்னேற்பாடுகளுடன் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒரே ஆயுதம் தடுப்பூசி
கொரோனாவை தடுப்பதற்கு மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்று மத்திய அரசும், மாநில அரசும் அறிவுறுத்தியும் பலரும் தடுப்பூசி போடுவதை தவிர்த்து விடுகின்றனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா பாதித்தாலும் மரணம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது போல பொதுமக்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து சென்றால் மட்டுமே மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications