மாடுகளை கடத்திய வட மாநில கும்பல்.. துரத்திப் பிடித்த மக்கள்.. சிக்கிய ஒருவர்.. பரபர சம்பவம்
சென்னையில் மாடு திருட வந்த வடமாநில கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: எப்போது மர்மநபர்கள் மாடுகளை திருடி கொண்டு போய்விடுவார்களோ என்று பூந்தமல்லி மக்கள் எந்நேரமும் தங்களது மாட்டினை கண்காணித்து கொண்டே வருகின்றனர்.
பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் பகுதி நேற்றிரவு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மக்கள் நெரிசல் அதிகமாகவே இருந்தது. இவ்வளவு இருந்தும், எதையுமே கண்டுகொள்ளாத ஒரு கும்பல் மாடுகளை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று, வேனில் மாடுகளை ஏற்றி கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த கும்பல் வேனுடன் தப்பி சென்றது. உடனே பொதுமக்களும் இன்னொரு வண்டியில் ஏறி பின்னாலேயே துரத்தி சென்றார்கள்.
ஒருவர் சிக்கினார்
பூந்தமல்லி ரோட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி துரத்தி சென்று வேனை மடக்கி விட்டார்கள். அந்த வேனுக்குள் 7 பேர் இருந்தார்கள். அவர்களுடன் ஒரு மாடும் இருந்தது. மக்களை கண்டதும் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் வசமாக மாட்டி கொண்டார்.
ரத்தம் வழிந்தது
அவரை நடுரோட்டிலேயே வெளுத்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அந்த நபருக்கு பொதுமக்கள் அடித்ததில் உடம்பெல்லாம் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதனால் போலீசார் அவரை கைது செய்து, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்கள். பிறகு விசாரணையை அவரிடம் ஆரம்பித்தனர்.
வாயே திறக்கவில்லை
எந்த கேள்விக்குமே பிடிபட்ட அந்த நபர் பதிலே சொல்லவில்லை. இன்னும் சொல்ல போனால் வாயே திறக்கவில்லை. உடனே போலீசார் அவரது சட்டைக்குள் கைவிட்டு ஏதாவது விவரம் இருக்கிறதா என்று பார்த்தனர். அப்போது ஆதார் அட்டை கிடைத்தது. அதில் அந்நபரின் பெயர் தாரிக் என்றும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தமிழகம் வந்து மாட்டை கடத்தி போக இந்த வடமாநில கும்பல் வந்திருக்கிறது என தெரியவந்தது.
வேன், மாடு பறிமுதல்
இதையடுத்து கொள்ளையர்களின் வேன், மற்றும் அதற்குள் இருந்த ஒரு மாட்டினை போலீசார் பறிமுதல் செய்தார்கள். எனவே மீண்டும் தங்கள் பகுதிக்குள் யாரேனும் வந்து மாட்டை திருடி கொண்டு போய்விடுவார்களோ என்று மக்கள் பதட்டம் நிறைந்த கண்காணிப்புடனே இருக்கிறார்கள்.