2 தர்றோம்.. இல்லை 3 வேண்டும்.. இறங்கி வராத திமுக.. இன்று போய் நாளை வா என கிளம்பி சென்ற சிபிஎம்!
நாளைய தினம் திமுகவுடன் சிபிஎம் 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தை என்று முன்வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் அதே வேகத்திலேயே இன்றைக்கு திரும்பி போய்விட்டார்களே... காரணம் என்னவா இருக்கும்?!!
விசிக போலவேதான் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணியில் இருப்பதாக சொல்லி கொண்டவர்கள் இரு தரப்பு கம்யூனிஸ்ட்கள். இதில் இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு கூடுதல் சீட்டுகள் வேண்டும் என்று அடம்பிடிக்கவும் கூட்டணி இழுபறி ஆரம்பமானது.
முதல், மற்றும் 2ம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கேட்ட 2 தொகுதியை வாங்கி கொண்டுவிட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் இன்னும் கூட்டணியில் இணையவில்லை என்று தெரியவில்லை. பேச்சுவார்த்தைக்கு என்று வந்தவர்கள் நாளை வருவதாக சொல்லிவிட்டு போனது ஏன் என்றும் புரியவில்லை.
அள்ளிக் கொடுக்கும் ஸ்டாலின்.. இந்திய கம்யூனிஸ்டுக்கும் 2 சீட்.. திமுக கூட்டணி கையெழுத்தானது!
திமுக தயக்கம்?
2 சீட்டுகள் கேட்டு கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இப்போது திடீரென 3 சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் திமுக தயங்குகிறதா? அல்லது தொகுதி பங்கீட்டில் ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்பது குழப்பமாக இருக்கிறது.
கமலுடன் சேர வாய்ப்பு?
கமலுடன் மார்க்சிஸ்ட் இணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்று பார்த்தாலும் அதற்கும் வாய்ப்பு இல்லைதான் என்று தோன்றுகிறது. கமல்தான் கம்யூனிஸ்ட்களுன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டார். அதற்காகத்தான் 4 நாட்களுக்கு முன்புகூட டெல்லி சென்று பிரகாஷ் காரத்தை சந்தித்து பேசினார். ஆனால், மோடி அரசை வீழ்த்தவும் அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்கவும் ஏற்கனவே திமுகவுடன் இணைந்து போட்டியிடுவதாக தீர்மானித்துவிட்டோம், அதனால் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கமலிடம் காரத் சொல்லி விட்டார். எனவே கமலுடனும் சேர வாய்ப்பில்லை.
3 கண்டிப்பாக வேண்டும்
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கம்யூனிஸ்ட்களுக்கு ஒன்றுதான் என திமுக முடிவு செய்ததாம். ஆனால் கமல் கூப்பிட்டும் போகாத காரணத்தினாலும், உறுதியாக கூட்டணிக்குள்ளேயே இருப்பதாலும் இன்றைய 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் 2 சீட்டுகள் தர திமுக ஒப்புக் கொண்டதாம். எனினும் 3 கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்கியே ஆக வேண்டும் அதாவது 2 எம்பி சீட், ஒரு ராஜ்ய சபா என்று சிபிஎம் பிடிவாதம் பிடிக்கவும் நாளைய தினம் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை என இழுபறி நீடித்துள்ளது.
3-ம் கட்ட பேச்சுவார்த்தை
இதற்கு காரணம், நாளை சிபிஎம் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், திமுக தருவதாக சொன்ன 2 தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அதன்பிறகே 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுகவுடன் ஈடுபட உள்ளது.
சிபிஎம் பிடிவாதம்
எப்படி பார்த்தாலும் இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு 2 கொடுத்துவிட்டதால், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 2 சீட் தர வேண்டிய நிர்ப்பந்தம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் 3 என்று சிபிஎம் அடம் பிடிப்பதால், திமுக என்ன முடிவு எடுக்கும் என தெரியவில்லை.