திமுக ஐடி விங் பஞ்சாயத்து.. இருக்குற பலத்துக்கு எப்படி இருக்கணும் “சாட்டைய வீசுங்க”- குமுறிய எம்.பி!
சென்னை : தி.மு.க ஐ.டி. விங்கின் முயற்சிகளை கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர்கள் சரியாக முன்னெடுத்துச் செல்வதில்லை என்கிற பிரச்சனை சூடு பிடித்துள்ளது.
தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் இதுகுறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் விரைவில் ஐ.டி விங் பொறுப்பாளர்கள் மீது சாட்டை சுழற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. 3 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு.. திணறும் 2 மாநிலங்கள்!
ஐ.டி விங் மாநில செயலாளராகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பி.ராஜா பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும், மெத்தனமாகச் செயல்படும் கட்சிப் பணியாளர்களால் உழைப்பு வீணாவதாக சென்னை அலுவலக ஐடி விங் பணியாளர்கள் புகார் வாசிக்கின்றனர்.
டி.ஆர்.பி.ராஜாவின் விங் 2.O
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ராஜினாமா செய்தபிறகு அந்தப் பொறுப்புக்கு டி.ஆர்.பி.ராஜா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு ஐ.டி விங்கை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பலர் புதிதாக பணியமர்த்தப்பட்டனர். ஆலோசகர்களாகவும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தி.மு.க ஐ.டி விங் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல உள்ளதாக அந்த அணியின் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா சமீபத்தில் கூட தெரிவித்திருந்தார்.
வெளுத்து வாங்கப்படும்
ஐ.டி விங் பணிகள் பற்றி கட்சித் தொண்டர்களிடையே எழுந்த சலசலப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்திய அரசியல் களம் எதிர்பார்க்கும் மாபெரும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அவரது திராவிட மாடல் ஆட்சியை நோக்கி வரும் அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவோரை விட்டு வைக்க மாட்டோம். இதற்கு நாகரீக அரசியல் சரிவராது. எதிரி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பினால், அவர்களது பாணியிலேயே வெளுத்து வாங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
மெனக்கெடும் ஐடி விங்
அந்தவகையில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் அளித்த பதில்கள் குறித்தும், அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முரசொலி நாளேட்டில் வெளியிடப்பட்ட கட்டுரை குறித்தும் சிறப்பான வடிவமைப்போடு போட்டோ கார்டுகளை வெளியிட்டது திமுக ஐ.டி.விங். ஆனால், அந்தப் புகைப்படங்களும் கூட அதிகமாக ரீ-ட்வீட் செய்யப்படவில்லை. இது ஐ.டி.விங்கின் சென்னை அலுவலக நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பகிர்வதே இல்லை
ஒவ்வொரு திமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ, எம்.பிக்களும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐ.டிகளை வைத்துள்ளளனர். அவர்கள் தாங்கள் செல்லும் விழாக்கள், நிகழ்ச்சிகள் பற்றி அதில் புகைப்படங்களையும், தகவல்களையும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ஐ.டி விங் முன்னெடுக்கும் பிரச்சாரங்களை அனைவரும் பகிர்ந்து அதை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பதில்லை என்கிற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
கட்சி உறுப்பினர்களாக இல்லாதவர்கள்தான்
திமுக ஐ.டி விங் வெளியிடும் ட்வீட்களை, புகைப்படங்களை ஐ.டி விங் பொறுப்பாளர்களாகச் செயல்படுபவர்களை விட, கட்சியில் உறுப்பினர்களாக கூட இல்லாத சமூக வலைதளங்களில் இயங்கும் திமுக ஆதரவாளர்கள்தான் அதிகமாக ரீட்வீட் செய்தும், வாட்ஸ்-அப்பில் பகிர்ந்தும் வருகின்றனர் என்றும், ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்கும் ஐ.டி விங் பொறுப்பாளர்கள் தங்களது பக்கங்களில் பகிர்ந்தால் பொதுமக்களின் கவனம் கிடைக்கும் என்றும் சென்னையில் உள்ள ஐ.டி விங் பணியாளர்கள் டி.ஆர்.பி.ராஜாவிடம் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின் உத்தரவு
டி.ஆர்.பி.ராஜா பொறுப்பேற்ற சமயத்தில் ஐ.டி.விங் நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அப்போதே, ஐ.டி அணியினரான நீங்கள், மற்ற எல்லோரையும் விட கூடுதல் வேகத்தோடு பணியாற்ற வேண்டும். புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, நமது சாதனைகளையும், கொள்கைகளையும் பரப்புங்கள், DATAதான் மிகப்பெரிய POWER. அதைப் பயன்படுத்துங்கள் என உத்தரவிட்டார் ஸ்டாலின்.
டி.ஆர்.பி.ராஜா அதிருப்தி
ஆனால், அதன்பிறகும், கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணியினரின் செயல்பாடுகள் ஒன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லை என அதிருப்தியில் இருக்கிறார் அதன் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா. சென்னை அலுவலகத்தில் இருந்து என்னதான் முயற்சிகள் எடுத்தாலும், உத்தரவைக் கேட்டு, செயல்படும் பங்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐ.டி.விங் பொறுப்பாளர்களுக்குத் தான் உள்ளது. அவர்களை உற்சாகப்படுத்த டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து ஊக்குவித்து வந்தாலும், இன்னும் அவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படவில்லை.
உற்சாகம் குறைந்த ராஜா
அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு கிளை தோறும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு பொறுப்பாளர்களை நியமித்திருந்தாலும் ஐடி விங்கின் ட்வீட்கள் நூற்றிச் சொச்சம் பேராலேயே ரீ-ட்வீட் செய்யப்படுகின்றன. இதனால், பெரும் நம்பிக்கையோடு பொறுப்பை ஏற்ற டி.ஆர்.பி.ராஜா அதிருப்தி அடைந்துள்ளார். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு இதுகுறித்து உத்தரவிட்டும் கூட பெரிதாக எந்த மாற்றமும் இல்லாததால் என்ன செய்வது எனச் சுணங்கியுள்ளார்.
திமுக எம்.பி
இந்நிலையில், இதுகுறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார். திமுகவின் ஐடி விங் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் வலுவான அணியாக உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஐடி விங்கின் ஒரு ட்வீட் 6 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் லைக்குகளை எட்ட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக சராசரியாக 240 லைக்ஸ் தான் கிடைக்கின்றன. சாட்டையைச் சுழற்றும் நேரம் இது, ஆரம்பிங்க என டி.ஆர்.பி.ராஜாவை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
மெத்தனம் காட்டாதீர்கள்
மேலும், உங்களது மற்றும் உங்கள் குழுவினருக்குப் பாராட்டுகள். தொழில்நுட்ப ஆதரவுக்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்த நேரம், செலவு செய்த சொந்தப் பணம் எவ்வளவு என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். ஆனால், முதல்வரின் கருத்தை கூட ரீ-ட்வீட் செய்யாமல் ஐ.டி விங் கட்சி பதவியை அனுபவிக்கும் பணியாளர்களிடம் மெத்தனம் காட்டாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் மீட்டிங்
திமுக எம்.பியின் இந்த கருத்து மூலம் ஐடி விங்கில் நிலவி வரும் பிரச்சனைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால், முதல்வர் ஸ்டாலினை வைத்தே இன்னொரு மீட்டிங் நடத்தி பொறுப்பாளர்களுக்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போடப்படும் எனக் கூறப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜாவின் பரிந்துரையின்படி ஐ.டி விங் பொறுப்பாளர்களில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.