2 நச் ட்வீட்.. வேணாம் ஐயா.. மாஸ்க் போதும் தேர்வு வேண்டும்.. திரண்டு வந்து பதில் சொல்லும் மக்கள்!
10ம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்க ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி ட்வீட் போட்டுள்ளார்.. இந்த ட்வீட்டிற்கு பல மாணவர்கள் "வேணாம் ஐயா, மாஸ்க் போதும், சிசிடிவி கேமிரா மூலம் தேர்வு நடத்தலாம்... நாங்க நல்லா படிச்சு வெச்சிருக்கோம்.. தேர்வை தள்ளி வைக்க வேணாம்.." என்று பதிலுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திலும் இதன் வைரஸ் குறித்த பீதி அதிகமாகவே எழுந்துள்ளது.. உச்சக்கட்ட முன்னெச்சரிக்கையை கையில் எடுத்து உள்ளது தமிழக அரசு.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த நோய் தொற்றில் இருந்து விடுபட பல்வேறு ஆலோசனைகளை அவ்வப்போது ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.
தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு அட்வைஸ் தந்தும் வருகிறார்.. "திரும்பவும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள்!" என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.
அதேபோல, சோப்பு வாங்க வசதியில்லாத மக்கள் எப்படி அடிக்கடி கையை கழுவ முடியும்.. பொதுமக்களுக்கு கைகழுவ அரசு இலவச சோப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தார்... இப்போது மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 2 கோரிக்கைகளை வைத்துள்ளார். இது சம்பந்தமாக 2 ட்வீட் பதிவிட்டுள்ளார்..
அதில், "கரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர்கள் நலன் கருதி, இப்போது நடைபெற்று வரும் 11,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27-ஆம் தேதி தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது ட்வீட்டில், "தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்! என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1.கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாணவர் நலன் கருதி, இப்போது நடைபெறும் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும், 27ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 19, 2020
தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சொன்னது அர்த்தம் நிறைந்தது.. சரியான வேண்டுகோளும்கூட.. ஆனால் தேர்வு தள்ளி வைக்க வேண்டும் என்பதற்கு மாணவர்கள் எல்லாம் சந்தோஷமாவார்கள் என்று பார்த்தால், டாக்டர் ஐயாவிடம் வேறு விதமான வேண்டுகோள்களை விடுக்க தொடங்கிவிட்டனர்.
ராமதாஸின் இந்த ட்வீட்டுக்கு கீழே, "ஐயா நான் 12-ம் வகுப்பு படிக்கிறேன்.. நாங்கள் தற்போது தான் தேர்வுக்கு நல்ல முறையில் தயாராகி கொண்டிருக்கின்றோம் தேர்வை ஒத்திவைத்தால், அலட்சியப் போக்கில் மதிப்பெண் குறைய வாய்ப்புண்டு. ஆகையால் தேர்வை பாதுகாப்பாக எதிர்கொள்ள முக கவசத்தோடு தேர்வினை எழுத வழிவகை செய்யுங்கள் ஐயா" என்று கேட்டுள்ளனர்.
2.தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை கோடைக்காலம் வரை நீட்டித்து அடுத்த கல்வியாண்டில் திறக்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 19, 2020
இன்னொரு மாணவரோ, "ஜயா தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதா அறிவிக்க வேண்டும்... நல்ல கருத்து.. இதை செயல்படுத்த அரசுக்கு நெருக்கடி தாருங்கள் ஐயா.. இது உங்களால் பாமகவால் தான் இதை சாதிக்க முடியும்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.. மற்றொருவர், "தேர்வுகள் மிக முக்கியமான ஒன்று தள்ளி வைக்க வேண்டாம்... மிகப்பெரிய மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவார்கள்... பாதுகாப்பு முறைகள் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் நடத்தலாம்.." என்று யோசனை கூறியுள்ளார்.
இப்படி ஆலோசனைகளை, சந்தேகங்களை பலரும் கேட்டபடி இருக்க திடீரென ஒருவர் வந்து "ஒரு பக்கம் கல்வித்தரம் சரியில்லை என்று வாய்கிழிய பேச வேண்டியது... மறுபக்கம் மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்க கூடிய அனைத்து யோசனைகளையும் கூற வேண்டியது. உங்களது பிள்ளையை மட்டும் சர்வதேச பள்ளியில் படிக்க வைத்து டாக்டர் ஆகி விட்டால் போதுமா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.