புயலே வந்தாலும் எதிர்கொள்வோம்..சென்னை மக்களை காக்க ஏற்பாடுகள் தயார்..மேயர் பிரியா
சென்னை: புயல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். கால்வாய்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு வருவதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. பல பகுதிகளில் மோட்டார் மூலம் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டதால் வெள்ளநீர் உடனே வடிந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேகர்பாபு
சென்னை யானைக்கவுனியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய அமைச்சர் சேகர்பாபு, நடந்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. முற்றிலும் சமூகநீதிக்கு குரல் கொடுக்கின்ற ஆட்சி. உச்சநீதிமன்றத்தில் சமூகநீதி மறுக்கப்படுவதால், அதையே எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டுகின்ற ஆட்சி என்று கூறினார்.

மேயர் பிரியா
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ''புயல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எந்த இடத்திலெல்லாம் பழைய மரங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் கண்டறியச் சொல்லியுள்ளோம். கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்காதவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள சேதம் ஏற்படாது
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வெள்ள சேதம் ஏற்படாத வகையில் சென்னையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா கூறினார்.

சென்னையில் மருத்துவ முகாம்
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கனமழை மற்றும் மிதமான மழை பொழிந்து வரும் நிலையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி கடந்த 5 ஆம் தேதி 200 வார்டுகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இன்று துறைமுகம் தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது இந்த மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார். இன்று மட்டும் சென்னை மாநகராட்சியில் நான்கு பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. காய்ச்சல், சேற்றுப்புண், பல் மற்றும் கண் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மருந்துகள் இந்த முகாம்களில் கிடைக்கும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications