ருத்ர தாண்டவமாடும் மாண்டஸ்! பேயாட்டம் போடும் மரங்கள்.. வெளுக்கும் கனமழை! வர்தா பாதிப்பு இருக்குமா?
சென்னை : மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க துவங்கி இருக்கும் நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது புயல் 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்து வரும் நிலையில் கடற்கரை ஓரப்பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது.
மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கும் நிலையில் வெளிப்புற பகுதி கரையை கடக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக புயல் கரையை கடந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் புயலின் வெளிப்புற பகுதி கரையை கடக்க தொடங்கி இருக்கும் நிலையில் மையப்பகுதி 11:30 மணிக்கு கடக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.
இருளில் மூழ்கிய ஈசிஆர்..பலத்த காற்றுடன் கரையைக்கடக்கும் மாண்டஸ்..கொட்டும் கனமழை
மாண்டஸ் புயல்
பின் வெளிப்பகுதி அதிகாலையில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தற்போது மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இருக்கும் நிலையில் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
தற்போது எங்கே?
தற்போதைய சூழலில் மாண்டஸ் புயல் கடலில் வேகம் குறைந்து மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னையில் காசிமேடு, பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை சாலை, பெசன்ட் நகர் தொடங்கி பல கடற்கரை பகுதிகளில் சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு 10 மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் புயல் காரணமாக கடைகள் உணவகங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பாதிப்பு இல்லை
வர்தா புயல் அளவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை; காற்று அதிகளவில் வீசி வருவதால் மழை படிப்படியாக குறையும் எனவும், அதே நேரத்தில் நாளை காலை வரை மழை தொடரும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயலால் உத்தண்டி பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.