மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் மாண்டஸ்..10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படை விரைவு
சென்னை: மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.
424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் கடலோரம் வசிக்கும் மக்களுக்கு புயல் குறித்து அறிவிப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் முன்னெச்சரிக்கை செய்திகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

புயலை எதிர்கொள்ள தயார்
புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி
புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பல்வேறு கடலோர பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருகின்றனர். அதைப்போல் உணவுக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் தயாராக இருப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. காற்று அதிகமாக வீசக்குடிய நிலையில் மக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயலை எதிர்க்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்ததுள்ளது. பல்வேறு விதமான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்னென்ன ஏற்பாடுகள்
குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளன. பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்பதையொட்டி, காற்றின் வேகத்தின் காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக 272 மர அறுவை இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை இயந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை இயந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு ஜேசிபி என 45 ஜேசிபி வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார்நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வார்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் (Tata Ace) மற்றும் 10 பணியாளர்களை தயார்நிலையில் வைத்திருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகம்
வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அவசர தொலைபேசி எண்கள்
புயல் மற்றும் மழையின் போது பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்காக அல்லது புகார்களைத் தெரிவிக்க மாநகராட்சியின் 1913 உதவி எண்ணிலும், 044-2561 9206. 044-2561 9207 மற்றும் 044-2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் புகார்களை விரைந்து பெறவும், அதன்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக, 10 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண்ணானது, 50 இணைப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications