மோடியின் மன்கிபாத் நிகழ்ச்சி- தமிழை புறக்கணித்த பொதிகை டிவி- ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பியது
சென்னை: பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியை தமிழகத்தில் செயல்படும் அரசு தொலைக்காட்சியான பொதிகை தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பாமல் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பியது கடும் விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது.
மத்திய பாரதிய ஜனதா அரசில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் வருகிறது.
கொரோனா 2ஆம் அலையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.. தடுப்பூசி வதந்திகளை நம்பாதீர்கள்.. பிரதமர் மோடி பேச்சு
தமிழ் புறக்கணிப்பு
அண்மையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் என மொத்தம் 17 மொழிகளில் புதிய கல்வி கொள்கை மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.
பாஜகவின் புறக்கணிப்பு
மத்திய பாஜக அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் நிகழ்ச்சிகளில் பேசும்போது மட்டும் தமிழ் மொழியை பற்றி உயர்வாக பேசுகின்றனர் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள். ஆனால் நடைமுறையில் தமிழ் மொழியை திட்டமிட்டே மத்திய பாஜக அரசு புறக்கணித்து வருகிறது.
மோடியின் மன்கிபாத்
இன்று பிரதமர் மோடியின் மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இந்தியாவின் இந்தி பேசாத மக்களும் கூட பிரதமர் மோடியின் இந்தி பேச்சை பொறுமையாக கேட்டு அதன் மொழிபெயர்ப்புக்காக காத்திருப்பது ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தி பேசாத மக்கள் புரிந்து கொள்ள கூடிய ஆங்கிலத்தில் பிரதமர் ஏன் பேசுவதில்லை என்கிற கேள்வியும் கூட முன்வைக்கப்படுகிறது.
பொதிகையில் தமிழ் இல்லை
இன்றைய மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியை தூர்தர்ஷனின் மாநில தொலைக்காட்சிகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பு செய்தன. ஆனால் தமிழத்தில் தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சி மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஒளிபரப்பியது. திட்டமிட்டே தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பாத பொதிகை தொலைக்காட்சிக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளன.