வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு! புயலாக சான்ஸ் இருக்கா? சென்னை வானிலை மைய தலைவர் புதிய அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி உள்ளது. இதனால் சென்னையில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதேபோல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை தமிழகம் முழுக்க கனமழை கொட்டி வருகிறது. தற்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இன்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மிக கனமழை கொட்டி வருகிறது. இதில் வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் உருவாகக்கூடும் என கூறப்படவில்லை.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத் தென் மண்டலத் தலைவர் அமுதா புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார். அதில், புயலாக மாறுமா என்பது நாளை தெரிந்துவிடும் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- சென்னையில் அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 10 செமீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 59 சதவீதம் தமிழகத்தில் சராசரியை விட, இயல்புக்கு அதிகமாக பெய்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 20 இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவுகிறது. இது வரும் 23 ஆம் தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கும். புயலாக மாறுமா என்பதை இப்போது கூற முடியாது. நாளை புயலாக மாறுமா என்பது தெரியும். இதேபோல் அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மாற வாய்ப்பு உள்ளது.
இதனால் சென்னையில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications