தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - அதி தீவிர கனமழையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
Recommended Video
வங்கக் கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் இடைவிடாது மழை பெய்தது.
இதன் காரணமாக தலைநகர் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 13ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டிருந்ததன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலை வந்தடையும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 17 ஆம் தேதி மேற்கு மற்றும் மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு நவம்பர் 18 ஆம் தேதி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

வீடுகளுக்குள் வெள்ளம்
சென்னை ,ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மிக கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்தது. காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று மாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை கொட்டியுள்ளதால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

அடைமழை காற்று
சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா நகர், மயிலாப்பூர்,பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை ஆழ்வார்பேட்டை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர்,கோடம்பாக்கம்,அசோக் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. மெரீனா கடற்கரையில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. கடல் சீற்றமடைந்துள்ளது. சில மணிநேரமாக பெய்த கனமழையால் சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்கியுள்ளது. சாந்தோமில் வெள்ளம் தேங்கத் தொடங்கியுள்ளது.

வானிலை மையம் அறிவிப்பு
சென்னை வானிலை மைய அதிகாரிகள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இது வலுப்பெற்று அதே இடத்திலேயே நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை உருவானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதுச்சேரியில் இருந்து 300கிமீ கிழக்கு - தென் கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 340 கிமீ தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருந்தது.

மழை அடி வெளுக்கும்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையிலும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் நவம்பர் 19ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதி தீவிர கனமழை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை, கடலூர், விழுப்புரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

நவ 19ல் கரையைக் கடக்கும்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவில் இருந்து மெதுவாக நகர்ந்து வருவதாகவும் நாளை காலை கரையைக் கடக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications