"சூடான பிரியாணி" செஸ் ஒலிம்பியாடுக்காக உழைத்த போலீசாருக்கு தன் கையால் பரிமாறிய டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை : மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய காவல்துறையினரை வெகுவாக பாராட்டிய காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, பாதுகாப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் விருந்து வழங்கினார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
சர்வதேச போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்த விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
உங்களுக்காக ஒரு சகோதரன் இருக்கிறேன்.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நெகிழவைத்த முதல்வர் ஸ்டாலின்!
இரவு பகல் பாராமல்
போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல், ஓட்டல்களில் இருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள், போட்டி நடைபெறும் ஓட்டல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் போட்டி நடந்து கொண்டிருந்தபோத, காவல்துறை டிஜிபி நேரில் சென்று அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
பாராட்டுகள்
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய காவலர்களை, டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார். நல்ல முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தமிழக காவல்துறைக்கு சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்று கொடுத்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து புகழாரம் சூட்டி பேசினார். காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எனவே பாதுகாப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையினருக்கும் பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.
தனது கையால் பரிமாறினார்
பின்னர், அனைத்து போலீசாருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வழங்கி அவர்களுடனே அமர்ந்து சாப்பிட்டார். தனது கைகளாலேயே வரிசையாக வந்த போலீசாருக்கு டிஜிபி பரிமாறி பாராட்டு தெரிவித்தது போலீசாருக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.
பங்கேற்றது யார்
விருந்து நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, விருந்து அளிக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.