"அடிமடியிலேயே".. 35 புள்ளிகள் பாஜகவில் இணைந்ததாக அறிவிப்பு.. கலங்கிய கடலூர் திமுக.. அங்கே பார்த்தால்?
கடலூர் பாஜகவில் 35 ஊராட்சி தலைவர்கள் இணைந்தார்கள் என்ற தகவல் பொய் என்கிறார்கள்
சென்னை: பாஜக செய்த அரசியல் குழப்பத்தினால், கடலூர் திமுகவுக்கு, உயிர் போய் உயிர் வந்துள்ளது.. அப்படி என்னதான் நடந்தது கடலூரில்..?
தமிழ்நாட்டில் தாங்கள்தான் பிரதான எதிர்கட்சி, என்று தங்களை முன்னிறுத்திக்கொள்ள பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அறிக்கைகளை விடுத்து வருகிறது.
அதிமுக செய்ய வேண்டியதை எல்லாம் பாஜக செய்து கொண்டிருப்பதையும் தமிழக மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.. அதற்கேற்றார்போல், தமிழகத்தில் பாஜக மெல்ல வளரவும் ஆரம்பித்துவிட்டது..
திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவின் ஆணி வேராக பார்க்கப்படும் கிராமங்களில்கூட, இன்று பாஜக துளிர்விட ஆரம்பித்துவிட்டது.

செம கணக்கு
மேலும், எம்பி தேர்தலையும் கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது.. அதற்காக ஒவ்வொரு கட்சியிலும் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசி தன் பக்கம் இழுத்து வருகிறது.. அந்தவகையில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஏராளமானோர் பாஜக பக்கம் தாவி வருகின்றனர். அந்தவகையில், கடலூர் மாவட்டத்திலும் 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.. இப்படி ஒரு தகவலை கடந்த 5ம் தேதி வெளியிட்டதே, பாஜக தலைவர் அண்ணாமலை ஆவார்.. அதிகாரப்பூர்வ பாஜகவின் ட்விட்டரிலும் இந்த செய்தி வெளியானது.

கமலாலயம்
"35 கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்" என்ற தலைப்பிடப்பட்டு அண்ணாமலையால் கையெழுத்திடப்பட்டும் இருந்தது. அதில், "திமுக அரசின் அராஜக போக்கால், நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் மற்றும் செயல்கள் மூலம் ஈர்க்கப்பட்டும், கமலாலயத்தில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான சோழன் பழனிசாமி அவர்கள் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டனர்.

கோளாறு
04.07.2022 அன்று கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் தீர்மானம் மூலம் நிறைவேற்ற முயன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் திமுக அரசின் கீழ் செயல்படும் அரசு இயந்திரங்களில் இருக்கும் கோளாறு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தான் காரணம். திமுக அரசு இவ்வூராட்சி மன்றங்களுக்கு அளிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக பாஜக பக்கபலமாக இருக்கும். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வழியில் ஊழலற்ற நல்லாட்சியை உள்ளாட்சியில் அளித்திட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருக்கும் 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் எனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

லிஸ்ட்
இதை பார்த்ததும், பாஜக தங்களது அடிமடியிலேயே கைவைத்து விட்டதா? என்று கடலூர் திமுக தரப்பு டென்ஷன் ஆகிவிட்டது. ஆளும் கட்சியில் இருந்து, அதுவும் 35 ஊராட்சி மன்ற தலைவர்களா? என்று அதிர்ந்தும் போனது.. ஆனால் பாஜகவில் சேர்ந்த 35 பஞ்சாயத்து தலைவர்கள் யார் என்ற லிஸ்ட் பாஜக இதுவரை வெளியிடவில்லை என்பதை அறிந்த பிறகுதான், இயல்பு நிலைக்கே வந்துள்ளது.. அதற்கு பிறகுதான் மொத்த விஷயமும் தெரியவந்துள்ளது.. 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் பாஜகவில் இணையவே இல்லையாம்..

4 பேர் மட்டுமே
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், தாங்கள் அனுப்பும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை என்றும் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கொடுக்க சென்றுள்ளார்கள்.. மற்றபடி இவர்கள் யாருமே கட்சியில் இணையவில்லையாம்.. அதுமட்டுமல்ல, தன் கட்சியில் சேர்ந்ததாக பாஜக வெளியிட்டு இருக்கும் போட்டோவில் வெறும் 4 பேர் மட்டுமே கடலூர் பஞ்சாயத்து தலைவர்களாம்.. மீதி பேர் எல்லாம் அந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் என்கிறார்கள்..

நிம்மதி பெருமூச்சு
இதில் இன்னொரு ஹைலைட்டையும் திமுக தரப்பில் சொல்கிறார்கள்.. அண்ணாமலையை சந்திக்க சென்றவர்கள் அதிமுக - பாஜக கட்சிகளை சேர்ந்தவர்கள்தானாம்.. அதாவது இவர்களில் பலர் ஏற்கனவே பாஜகவில்தான் இருக்கிறார்கள்.. அவர்களைதான் புதிதாக பாஜகவில் இணைந்துவிட்டதாக அண்ணாமலை அறிவித்து, கையெழுத்தும் போட்டுள்ளார் என்கிறார்கள்.. ஆக மொத்தம் கடலூர் திமுக இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

அய்யப்பன்
இப்படித்தான், இதே கடலூர் திமுகவில் 2 மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது.. அதாவது நடந்து முடிந்த மாநகராட்சிக்கு தேர்தலில் மேயர் பதவிக்கு கட்சி அறிவித்த சுந்தரி ராஜாவிற்கு எதிராக திமுக போட்டி வேட்பாளர் கீதா குணசேகரன் மனு தாக்கல் செய்தார்.. கீதா குணசேகரன் கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் ஆதரவாளர் ஆவார்.. இவரை மேயராக்கிவிட வேண்டும் என்று அய்யப்பன் முயன்றபோது, சுந்தரி ராஜா மேயராக வெற்றி பெற்றார்... தோல்வி அடைந்த கீதா குணசேகரன், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்..
Recommended Video

பாஜக வலை
இதற்கு பிறகு, அய்யப்பன் மீதான அதிருப்தி வெடித்தது.. அவரை கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கியது... இதையறிந்த பாஜக, அய்யப்பனை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் செய்திகள் கசிந்தன... ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.. நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, மறுபடியும் கட்சியில் அவர் இணைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது .. ஆனால், அய்யப்பனுக்கு பாஜக வலை விரித்ததா? இல்லையா என்ற தகவல் கடைசிவரை உறுதியாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications