எங்க பிளான் சக்சஸ்.. ‘கவனிச்சீங்களா.. காரியத்தை சாதிச்சிட்டார்’ - ஈபிஎஸ் டீம் உற்சாகம்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறி வந்தாலும், 'சாதகமான பலன் கிடைத்துவிட்டது' என உற்சாகம் குறையாமல் கூறுகிறார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலில், தனக்கு டெல்லி ஆதரவு கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களோடு டெல்லிக்கு தனது சகாக்களோடு கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார். இது ஓபிஎஸ் தரப்பில் உற்சாகத்தைக் கூட்டியது.
கருணாநிதியாலேயே முடியல.. ஸ்டாலினால் முடியுமா? - மேடையிலேயே சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
டெல்லி சென்ற ஈபிஎஸ்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 22ஆம் தேதி எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட தனது சகாக்களோடு டெல்லி சென்றார் ஈபிஎஸ். டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பிரிவு உபச்சார விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது பிரதமர் மோடியிடம் பேசினார்.
எடப்பாடி திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தனியாகச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். அப்போது, அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை, கட்சிக்குள் பிரச்சனை ஏற்படுத்தும் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து மோடி, அமித்ஷாவிடம் எடுத்துக் கூறி பாஜக தலைமையின் ஆதரவை தன் பக்கம் ஈர்க்கலாம் என அவர் திட்டமிட்டிருந்தார்.
ஏமாற்றம்
மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் நேரம் கேட்டிருந்த நிலையில், தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக இருவருமே எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தனது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துகொண்டு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.
ஓபிஎஸ் தரப்பு ஹேப்பி
முன்னதாக, கடந்த மாதம் டெல்லி சென்ற ஓபிஎஸ்ஸும் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்காமலேயே திரும்ப நேரிட்டது. இப்போது எடப்பாடி பழனிசாமியும் பிரதமரிடம் பேச முடியாமல் போனதால், டெல்லி தலைமை இன்னும் நம் பக்கம்தான் என உற்சாகமடைந்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். தொடர்ந்து, சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான திட்டத்தை தீவிரப்படுத்தினர்.
பிளான் சக்சஸ்
ஆனால், டெல்லியில் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசாமல் திரும்பியது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு இல்லை, எப்படி பார்த்தாலும் எங்கள் திட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என உற்சாகம் குறையாமல் பேசுகிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர். காரணம், டெல்லி சென்றபோது மோடி, அமித்ஷாவை சந்திக்க முடியாமல் போனாலும், பாஜகவின் முக்கிய புள்ளிகள் சிலரை சந்தித்து, தங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.
அடுத்தடுத்து ரெய்டுகள்
கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், நெருக்கமானவர்கள் வருமான வரித்துறையால் குறிவைக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமியின் வலது கரமான எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமான சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து நடைபெற்ற சோதனையும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்பான இடங்களில் நடந்த சோதனையும் ஈபிஎஸுக்கு பெரும் தலைவலியாக மாறியது.
எதிராகத் திரும்பும்
இந்நிலையில் தான், டெல்லி சென்றார் ஈபிஎஸ். தனக்கு நெருக்கமானவர்கள் மீது நடத்தப்படும் ரெய்டு குறித்தும் பேசுவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் உள்ள பாஜகவின் மூத்த அமைச்சர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியதாகவும், இந்த ரெய்டு, திமுகவுக்கு ஆதரவாகத் திரும்பும், நமது கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சிக்கல் ஏற்படும் என்ற வாதத்தை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ரெய்டு அவ்வளவுதான்?
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்த பிறகு வருமான வரித்துறையில் இருந்து வேறு யார் மீதும் ரெய்டு நடத்தப்படவில்லை. மதுரையில் நடைபெற்று வந்த சோதனையும் 23ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டது. இதுவே எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான சிக்னல் தான். ஏற்கனவே நடந்த ரெய்டுகளிலும் மேல் நடவடிக்கைகள் இனி தீவிரமடையாது. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று தனக்கு ஆதரவாக காரியத்தை சாதித்துவிட்டே திரும்பி இருக்கிறார் என்கிறார்கள் ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கமான தரப்பினர்.