கொஞ்ச நேரம் அட்லியான ’தளபதி’ விஜய்! வாரிசு சொன்ன குட்டி ஸ்டோரி கூட காப்பியா? அன்றே சொன்ன ரஜினிகாந்த்
சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் சமூக வலைதளங்கள் முழுவதும் அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் அதில் நடிகர் விஜய் பேசிய குட்டி கதைகளும் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. அதே நேரத்தில் இதே கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் சொல்லிவிட்டார் என விமர்சித்து வருகின்றனர்.
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரசிகர்களால் தளபதி என தலையில் வைத்து கொண்டாடப்படும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வழக்கம்போல படத்திற்கான ஹைப்பும் எகிறி இருக்கிறது.
குறிப்பாக நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் சினிமா போட்டியாளரான அஜித் குமார் நடித்திருக்கும் துணிவு படமும் அதே பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் பொங்கல் ரேசில் வெற்றி பெறப் போவது யார் என்ற பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.
ஆடைகளை கிழித்து.. ஆபாசமாக பேசி! இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை! ஹைகோர்ட் வழக்கறிஞர் கைது
வாரிசு
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன். விவேக்கின் பாடல் வரிகளில் சித்ரா, விஜய் - மானசி, சிலம்பரசன் உள்ளிட்டோர் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து இருக்கிறது. குறிப்பாக 'ரஞ்சிதமே' 'தீ தளபதி' பாடல் வெறித்தனம் என்றால் சித்ரா பாடிய 'அம்மா பாட்டு' மனதை நெகிழ வைக்கும் வகையில் இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பு
இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், சம்யுக்தா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கும் நிலையில் படக்குழு இடையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. யானையை சூட்டிங்கில் பயன்படுத்தியது, தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை, தெலுங்கு திரையுலகின் போர்க்கொடி என சிக்கல்களை சந்தித்தாலும் தற்போது அந்த படம் அவற்றையெல்லாம் தாண்டி வெளிவர இருக்கிறது.
ஆடியோ லாஞ்ச்
விஜய் படத்தை விட அந்த படத்திற்கு முன்னதாக வரும் ஆடியோ லாஞ்ச் தான் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாக இருக்கும். அப்படித்தான் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் அமைந்தது. அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்பனை, ரசிகர்கள் மீது தாக்குதல் ,நேரு ஸ்டேடியத்தில் இருக்கைகள் சேதமானதால் படக்குழுவுக்கு அபராதம் என சர்ச்சைகளுடன் அந்த விழா நடைபெற்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. இதனால் நடிகர் விஜய்யும் செல்பி வீடியோ எடுத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே குட்டிக் கதை இருக்கும்.. தற்போதும் நடிகர் விஜய் வழக்கம் போல குட்டி கதைகளையும் எடுத்து வைத்தார்.
குட்டி கதை
அண்ணன் தங்கச்சி கதையோடு 1990களில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக வந்தார் என ஒரு கதையை கூறினார் விஜய். அதில்,"1990களில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக வந்தார். நான் எங்கு சென்றாலும் அவர் வந்தார். கொஞ்ச நாட்களில் எனக்கு சீரியசான போட்டியாளரா மாறினார். அவரின் வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன். நான் அவரை விட வெற்றிபெற விரும்பினேன், அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை. அந்த போட்டியாளர் உருவான ஆண்டு 1992. அவர் வேறு யாருமல்ல, அவர் பெயர் ஜோசப் விஜய். ஆம், எனக்கு நானே போட்டியாளர். உங்களுக்கு எப்போதும் ஒரு போட்டியாளர் தேவை. முதலில் உங்களுடன் போட்டியிடுங்கள், உங்களுக்கு நீங்களே சொந்த போட்டியாக இருங்கள்" என்றார்.
ரஜினிகாந்த் சொன்ன கதை
ஆடியோ லான்ச் விவகாரங்களை 'ஐயோ அம்மா ஆடியோ லான்ச்' என்ற ஹேஷ்டேக் உடன் அஜித் ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவர்கள் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒரு விவகாரம் சிக்கி இருக்கிறது. அதாவது தனக்குத் தானே போட்டி என நடிகர் விஜய் சொன்ன குட்டிக்கதை கூட காபி தான் எனக் கூறியிருக்கின்றனர். படையப்பா வெற்றிக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ," எனக்கு எதிரியும் நான் தான்.. நண்பணும் நான் தான்.. எனக்கு என் படம் மட்டும் தான் எதிரி.. மத்தவங்க படத்துக்கு நான் போட்டி இல்ல..இந்தப் படம் ஹிட்டானால் அடுத்த படம் இதைவிட ஹிட்டாக வேண்டும் தற்போது படையப்பா ஹிட் அதைவிட பெரிய ஹிட் கொடுக்க வேண்டும். எனவே எனக்கு நான்தான் போட்டி" எனக் கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோவை தேடிப்பிடித்து பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் விஜயின் இயக்குனர் அட்லி தான் காப்பியடிப்பார் என்றால் விஜய் கூட கதைகளை காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார் என விமர்சித்து வருகின்றனர்.