சினிமா போல் அரசியலில் ஜெயிக்க முடியாது.. படிப்படியாக தான் வரமுடியும்.. எடப்பாடி பகிர்ந்த ரகசியம்!
சென்னை: சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ, அரசியலில் நுழைவதும் கடினம் தான் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் எனக்கும் மிக தூரம். நான் சினிமா பார்த்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆகவே திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி தெரியாது. அரசியலும், சினிமாவும் ஒன்றாக கலந்திருக்கிறது.

அரசியல் எளிதல்ல
தமிழ்நாட்டில் சாமானியர் முதலமைச்சராக வருவது எளிதல்ல. ஏனென்றால் சினிமாவுக்கு வருவது மிகவும் கடினம்.அதேபோல் தான் அரசியலும். திரைப்படத்தில் ஒருவர் எப்படி ஒருவர் முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல் அரசியலிலும் அனைவராலும் முத்திரை பதிக்க முடியாது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

நடிகர்களின் வெற்றி
எம்ஜிஆர் ஏழைகளின் கொடையாக பிறந்தவர். அவரது காலத்தில் ஏழைகளின் வாழ்வியல், கல்வி, பொருளாதாரம் உயர்ந்தது. திரைத்துறைக்கும், அதிமுகவுக்கு பெரிய தொடர்பு உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். அரசியலில் உழைப்பது கடினம். சினிமாவில் எளிதாக வந்துவிடலாம். திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல. ஒவ்வொரு படியாக ஏரிதான் வர முடியும்.

அரசியல் பாதை
தனி மனிதராக எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் செயல்பாடுகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இருக்க வேண்டும். 34 வயதிலேயே சட்டமன்றத்தில் இருந்தவன் நான். எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் அப்போதே என்னை தெரியும். அரசியல் பயணம் என்பது முள்ளும், பள்ளமும் நிறைந்த பாதை.

சினிமாவும் அதிமுகவும்
அரசியலில் கடந்த காலம் என்பது வேறு. ஆனால் இன்று தகவல் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்துள்ளது. அதனால் அனைத்து விவகாரங்களிலும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இயக்குநர் ஆர்கே செல்வமணி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் தொழிலாளர்களின் நலனுக்காகவே சந்தித்துள்ளார். சொந்த நலனுக்காக சந்தித்ததே இல்லை. அதிமுக ஆட்சியில் திரைத்துறைக்கு பல உதவிகள் செய்துள்ளோம். ஏனென்றால் இருபெரும் தலைவர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications