கல்லூரிகளில் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு.. மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் பொன்முடி!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்கள் ஊரடங்கு போடப்பட்டது. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பள்ளி ,கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் நடத்தப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.

மாணவ-மாணவிகள் போராட்டம்
தற்போது கொரோனா பெருமளவு குறைய தொடங்கியதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறக்கப்பட்டன. இனி வரும் தேர்வுகள் நேரடியாகவே தேர்வு மையங்களில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள்

தேர்வு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் ஜனவரி 20-ம் தேதி முதல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடித் தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவர்கள், தேர்வு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்றது.

ஜனவரி 20 தேதி முதல் தேர்வு
இந்த ஆலோசனை கூட்டத்தில் 11 அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது:- நேரடி தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கேட்டதால் அவர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 தேதி முதல் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்களின் எதிர் காலம்
மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படுகிறது, ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். நேரடி தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும்.

செமஸ்டர் தேர்வுகள்
இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் எடுக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடைப்பெறும். மாணவர்களையும்,பெற்றோர்களையும் அழைத்து எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சசர் பொன்முடி கூறினார்.












Click it and Unblock the Notifications