நாங்குநேரியில் என்ன நடந்தது? இயக்குனர் மாரி செல்வராஜ் கோபத்தின் பின்னணி
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என நாங்குநேரி சம்பவம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.நாங்குநேரியில் என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தலித் சமூகத்தினரின் வலிகளை அதிகம் படமாக்கியவர் மாரி செல்வராஜ்.. அவரது முதல் படமான பரியேறும் பெருமாள் சாதிய அடக்குமுறையை தோலுரித்து இருக்கும். அந்த படத்தில் சாதிய அடக்குமுறைக்கு அடங்கி போகும் இளைஞராக கதையின் நாயகன் இருப்பார்.

இரண்டாவது படமான கர்ணனில் அப்படியே நேர் எதிராக கதையின் நாயகன் இருப்பார். சாதிய அடக்குமுறையால் ஊருக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகவும், சாதிய சிந்தனை உடைய டிஎஸ்பிக்கு எதிராக கொந்தளித்து இருப்பார்.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ், அதன்பின்னர் எடுத்த மாமன்னன் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரம் உள்ளிட்ட உயர்ந்த நிலைக்கு சென்றாலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது இல்லை என்பதையும், அவர்களை பக்கத்தில் உட்காருவதை கூட அசிங்கமாக நினைப்பவர்களுக்கு மத்தியில் தான் நாம் இருக்கிறோம் என்பதையும் முகத்தில் அறைவது போல் சொல்லியிருப்பார்.
தொடர்ந்து சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனுக்கு நடந்த கொடுமையான தாக்குதல் சம்பவத்திற்கு குரல் கொடுத்துள்ளார். சாதிய சிந்தனையுடன் சிறார்கள் தாக்கியதால் நாங்குநேரி மாணவர் உயிருக்கு போராடி வருகிறார். இதுபற்றி செய்திகள் வெளியான நிலையில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் மாரி செல்வராஜ் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை , யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போக சொல்லி, உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்." என்று கூறியுள்ளார்

என்ன நடந்தது: நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா - முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் , அந்த மாணவரிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்தார்களாம். இதில் மாணவன் சின்னத்துரை கையில் வைத்திருக்கும் காசு மூலமாக அவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதும், ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதற்கு சின்னதுரையை பணம் கொடுக்க சொல்வதும் நடந்து வந்ததாம்.
தொடர்ந்து நடந்த சாதிய ஒடுக்குமுறை காரணமாக சின்னதுரை பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார். அதற்கு சின்னதுரை, சக மானவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார்; ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளார்.
நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரிக்கும் அளவுக்கு வந்துவிட்டதால், சின்னத்துரையை கொன்றுவிட வேண்டும் என என சில மாணவர்கள் வெறியுடன் சுற்றியுள்ளனர்.இதன்படியே சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள். தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரை முயன்றதால் தலையில் ஒரு வெட்டும், வலது கையில் மூன்று வெட்டு, இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமாக வெட்டி உள்ளார்கள். இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த முதியவரை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர், இடைநின்ற 2 மாணவர்கள் உள்பட கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 மாணவர்களிடமும் நாங்குநேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications