OPS: ஒற்றை தலைமை கூடாது.. இரட்டை தலைமைதான் தொடர வேண்டும்.. வெடித்து சீறி ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை : தற்போதைய சூழலில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் தேவையற்றது. அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 23-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

இதையடுத்து, ஒற்றைத் தலைமையைக் கைப்பற்றுவதில் இருவரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரின் ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உடனிருந்து பணியாற்றியவர்கள், சற்று விலகி இருப்பவர்கள் இணைந்து இன்று இயக்கத்தை பலப்படுத்த வேண்டிய நேரம் இது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு எழ வேண்டுமென்றால் இயக்கத்தில் நீண்ட காலமாக பணியாற்றிய தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்க வேண்டும்.
நானும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தலைமை பதவியில் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தபோது, இருவரும் மனமொத்து பணியாற்றி வந்தோம். எங்கள் இருவரின் கூட்டுத் தலைமையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டு, அவர்கள் கழகத்தின் அத்தனை பொறுப்பாளர்களையும் நியமிக்க வேண்டிய இந்த நேரத்தில் இந்த விஷயம் தேவைதானா என்பதுதான் எனது கேள்வி.
தற்போதுதான் உட்கட்சி தேர்தல் முடிந்து உள்ள நிலையில் பொதுச் செயலாளர் பதவி குறித்து பேசுவது தேவையற்றது. அறையில் பேச வேண்டிய விஷயத்தை அம்பலத்தில் பேசி விவாதமாக்கியுள்ளனர். உட்கட்சி விவகாரம் குறித்து பொது வெளியில் பேசியது தவறு." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications