வெட்கக்கேடு.. முதல்வர் ஸ்டாலினுக்கு இது அழகல்ல! மோடி முன்பான பேச்சால் மத்திய அமைச்சர் கொதிப்பு
சென்னை: ‛‛தமிழகத்துக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து தமிழ் கலாசாரம், மொழி பற்றி பெருமையாக பேசினார். ஆனால் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு தகாத முறையில் நடந்துள்ளது வெட்கக்கேடானது'' என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கடுமையாக விளாசியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நேற்று ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் முதல் முதலாக தோன்றினர்.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
இந்த விழாவில் முதலில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்று பேசினார். அவர் மத்திய அரசின் திட்டங்கள் பற்றி புள்ளிவிபரங்களை மேற்கொள்காட்டி பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தார்.
ஒன்றிய அரசு என பேசிய முதல்வர்
அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் தமிழகம் பற்றியும், தமிழக அரசு பற்றியும் பெருமையாக கூறினார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு பற்றியும், கூட்டாச்சி தத்துவம், திராவிட மாடல் ஆட்சி பற்றியும் விளக்கமாக கூறினார். மேலும் மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க வேண்டும், இந்தி மொழிக்கு நிகராக தமிழ் மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிப்பது, கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஸ்டாலின் பேசினார். அதோடு, மத்திய அரசு எனக்குறிப்பிடாமல், ஒன்றிய அரசு என 10க்கம் அதிக முறை கூறினார். மேலும் 2 முறை திராவிட மாடல் ஆட்சி எனவும் பெருமையாக கூறினார்.
அண்ணாமலை கண்டனம்
ஸ்டாலினின் இத்தகைய பேச்சால் பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல் ஆளாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெகுண்டெழுந்தார். பிரதமர் நரேந்திர மோடியை மேடையில் வைத்து கொண்டு ஸ்டாலின் இப்படி பேசியது அநாகரீகம், இது தமிழக அரசியலில் ஒரு கரும்புள்ளி என கடுமையாக விமர்சனம் செய்தார். இதேபோல் பிற பாஜக தலைவர்களும் ஸ்டாலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் கடும் கண்டனம்
இந்நிலையில் தான் மத்திய இணையமைச்சர் எல் முருகன், முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டாலின் பற்றியும், அவரது ஆட்சி குறித்தும் எல் முருகன் கடும் சொற்களால் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி எல் முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
வெட்கக்கேடானது
தமிழகத்துக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து தமிழ் கலாசாரம், மொழி பற்றி பெருமையாக பேசினார்.ஆனால் ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு தகாத முறையில் நடந்துள்ளது வெட்கக்கேடானது. தமிழக வளர்ச்சி திட்டம் தொடர்பான விழாவை திமுக பேரணியாக ஸ்டாலின் மாற்றியுள்ளார். இதன் மூலம் கடந்தகால ஆட்சியின் தவறுகளை மூடி மறைக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் ஸ்டாலினின் செயல்களை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்'' என விமர்சனம் செய்துள்ளார்.