கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 2984 பேர்.. காஞ்சிபுரம் இன்ஜினியர் டிஸ்சார்ஜ்
சென்னை: கோரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டு, தினமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நோய் அறிகுறி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார்கள். ஒருவேளை நோய் அறிகுறி தென்பட்டால் அந்த நபரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கிறார்கள்.
28 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேர், எந்தெந்த தேதிகளில் வருகை தந்தனர், எத்தனை பேர் வீடுகளுக்குள் இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
25 வயது பெண், 56 வயது ஆண்.. பெங்களூரில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. அமைச்சர் அறிவிப்பு
கண்காணிப்பில் 2984 பேர்
இதன்படி, சென்னையில் அதிகபட்சமாக 801 பேர் கண்காணிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள், கோவை மாவட்டத்தில் 159 பேர் இந்த கண்காணிப்பு வளையத்தில் இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 152 பேர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 70 பேர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 83 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆக மொத்தம் தமிழகத்தில் 2984 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
என்ன ஆனது
இதனிடையே, காஞ்சிபுரத்தை சேர்ந்த இன்ஜினியர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டதாகவும், அவர் 16ம் தேதியே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். ஆனால், அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லை. அவர் இன்னும் குணமடையவில்லை என்று தகவல் வெளியானது.
தமிழகத்தில் ஒருவர்
தினமும், மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளி விவரத் தகவல்படி, தமிழகத்தில் 1 நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவே தெரிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஐயப்பாட்டை விஜயபாஸ்கர் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இன்ஜினியரின் கதி என்ன? அவர் சிகிச்சை நிலவரம் எப்படி உள்ளது என்பதை அரசு விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
பாசிட்டிவ் வரக்கூடாது
இந்த நிலையில், இன்று மாலை நிருபர்களை சந்தித்தார் விஜயபாஸ்கர். அப்போது, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இன்ஜினியர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார். மேலும், அவர் தற்போது வீட்டில் இருக்கிறாரா அல்லது வேறு எங்கே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவ தார்மீக அடிப்படையில் வெளியிட முடியாது. எனவே மக்கள் அஞ்ச வேண்டாம். வட மாநிலத்திலிருந்து ரயிலில் வந்த ஒருவருக்கு தற்போது, இன்று, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, தமிழகம் முழுக்க கண்காணிப்பில் உள்ள 2984 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்படுமோ என்ற அச்சம் அவர்களது உறவினர்களிடையே உள்ளது. அதிருஷ்டவசமாக இவர்களுக்கு எந்த அறிகுறியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற, ஆதங்கம் அவர்களின் உறவினர்களிடம் நிலவுகிறது.