ஆம்னி பஸ் கட்டணத்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துரும்! ஏர்போர்ட் பக்கம் மட்டும் போயிராதீங்க மக்களே! ஷாக்!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னைவாசிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர். தற்போது ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதே நேரத்தில் அதைவிட அதிகமாக விமான கட்டணம் உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் வழக்கத்தை விட பல மடங்கு விமான கட்டணமும் உயர்ந்திருக்கிறது. வழக்கமாக 3800க்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு விமான கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலையில், 15ஆம் தேதி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் விமான கட்டணம் உள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் இல்லாதவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில், அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து சேவையை பயன்படுத்துவார்கள்.

தீபாவளி பயணம்
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். இதனால் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அரசு சார்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டண உயர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
ஆம்னி பேருந்து கட்டணம்
சாதாரண நாட்களில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல ஆயிரம் ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை தான் கட்டணமாக நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போது 3000த்தில் இருந்து 7000 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க நடுத்தர மக்கள் பயன்படுத்தும் விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விமான கட்டணம் உயர்வு
வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் 3800 ரூபாய் முதல் 4180 ரூபாய் வரைதான் இருக்கும். ஆனால், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன் இருக்கும் நான்கு நாட்களும் விமான கட்டணம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. 15ஆம் தேதி 4800, 16ஆம் தேதி 7500 ஆகவும், 17ஆம் தேதி 10,328 ரூபாயாகவும், 18ஆம் தேதி 6000 ரூபாயாகவும் இருக்கிறது.
விமான பயணிகள் அதிர்ச்சி
இதேபோல, சென்னையில் இருந்து திருச்சிக்கு 16ஆம் தேதி 6900 ரூபாயாகவும், 17ஆம் தேதி பத்தாயிரம் ரூபாயாகவும், பதினெட்டாம் தேதி 9300 ஆகவும், 19ஆம் தேதி 6074 ரூபாயாகவும் உள்ளது. திருச்சி மதுரை விமான நிலையங்களுக்கு அடுத்துள்ள தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து 17-ஆம் தேதி 6500 ஆகவும், 18ஆம் தேதி 7500 ரூபாயாகவும், 19ஆம் தேதி 6700 ரூபாயாகவும் விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண நாட்களில் தூத்துக்குடிக்கு 4000 ரூபாய் மட்டுமே விமான கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆம்னி பேருந்துகளுக்கு போட்டியாக விமான பயணத்தின் கட்டணமும் பல மடங்கு உயர்ந்திருப்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications