முயற்சி திருவினையாகட்டும்- சேது கால்வாய் திட்டம் தீர்மானம்- முதல்வர் ஸ்டாலினுக்கு கி.வீரமணி பாராட்டு
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும்!
இத்திட்டம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்குக் கட்சிகள் அனைத்தும் வற்புறுத்தி வந்த திட்டமாகும்!
அறிஞர் அண்ணா 'எழுச்சி நாள்' கொண்டாடிய திட்டம்; திராவிடர் கழகம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தின்மூலம் நமது தலைமையில் வற்புறுத்திய திட்டம்!
முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஒன்றிய அரசில் தி.மு.க. இடம்பெற்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, சேதுக்கால்வாய்த் திட்டத்தினைச் செயல்படுத்திட, தீவிர முயற்சியை எடுத்ததின் விளைவாக, டி.ஆர்.பாலு அவர்கள் கப்பல் துறை அமைச்சராகிய நிலையில், இத்திட்டம் தொடங்கப்பட்டு நடந்தது; சுமார் ரூ.2,493 கோடி செலவழித்து, இன்னும் 23 கிலோ மீட்டர் தூரமே பணி மீதமிருந்த நிலையில், இராமர் பாலம் இடிபடக் கூடாது என்று அன்றைய பா.ஜ.க.,
அ.தி.மு.க., சுப்பிரமணியசாமி போன்றோர் எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை ஆணை பெற்றனர்.
''இராமர் பாலம் அல்ல, அது வெறும் பவளம், சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்ட ஆதாம்பாலம்தான்'' என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெளிவாகவே, இராமர் பாலம் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இல்லை என்று இப்பொழுது கூறியுள்ளார்.
''மீண்டும் அந்தத் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும்'' என்று தந்தை பெரியார் நினைவு நாளில், திருச்சியில் செய்தியாளர்களிடையே விளக்கமாகக் கூறியதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர நமது முதலமைச்சருக்கு வேண்டுகோளும் விடுத்தோம். இன்று (12.1.2023) சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்களால் முன்மொழியப்பட்ட அந்தத் தீர்மானத்தை, ஒருமனதாக நிறைவேற்றி கொடுத்ததற்கு, முதலமைச்சர் அவர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்து, முயற்சி திருவினையாகட்டும் என்று வாழ்த்துகிறோம்! நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்!! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 28-ந் தேதி கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், இந்த மாதம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், சேதுக் கால்வாய் - இராமன் பாலம் பற்றி மாநிலங்களவையில் கார்த்திகேய சர்மா என்ற உறுப்பினர் கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்த அறிவியல் தொழில்நுட்பத் துறை ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ''இராமர் பாலம் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பழங்கால இராமர் பாலம் இருந்ததாகக் கூறப்படும் பிராந்தியத்தின் செயற்கைக்கோள் படங்கள், தீவுகள், சுண்ணாம்புக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பாலத்தின் எச்சங்கள் எனத் துல்லியமாகக் கூற முடியாது. மேலும், வரலாறு 18,000 ஆண்டுகளுக்கு மேலானது என்பதாலும், பாலம் 56 கி.மீ. கொண்டது என்பதாலும், அந்தப் பாலம் இருந்ததற்கான சரியான கட்டமைப்பைக் கூற முடியாது'' என்றும் திட்டவட்டமாக அவர் கூறியுள்ளார். இதை அன்றே தி.மு.க., திராவிடர் கழகம், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை போன்ற கட்சிகளும், அமைப்புகளும் தமிழ்நாடெங்கும் பிரச்சாரம் செய்தன! இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பயன்மிகு சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டுமென்பதை - வரும் 9.1.2023 இல் தொடங்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தொடர் கூட்டத்தில், ஒரு தனித் தீர்மானத்தை - ஒன்றிய அரசினை வற்புறுத்திடும் வகையில், நிறைவேற்றி அனுப்பி வைத்து, அதை மக்கள் மன்றத்திலும் விரிவாக எடுத்து விளக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நாம் கேட்டுக் கொள்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.