இந்தி திணிப்பு.. நவ.4ல் களமிறங்கும் திமுக,திக.. ஒருபக்கம் பொதுக்கூட்டம், இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை: திமுகவின் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் திக மாணவரணி சார்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக அக்.14ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்.18ல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்தி திணிப்பு எதிராக திராவிடர் கழக மாணவரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் என்று கி.வீரமணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி எதிர்ப்பு என்பது இன்று நேற்று நடைபெறுவதல்ல. உண்மையைச் சொல்லப்போனால், வரலாற்று நெடுக நடைபெற்று வரும் ஆரிய - திராவிடப் போராட்டத்தின் உள்ளடக்கமான கூறு என்று இதனைக் கூற வேண்டும்.

இந்தி திணிப்பு
1937ல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் இடையிடையே மத்திய அரசுகளின் இந்தி திணிப்பின் காரணமாகப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்த அறிக்கை மூலம் மீண்டும் இந்தி திணிப்பு வெளிப்பட்டுள்ளது.

விளைவு விபரீதமாகும்
இதனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல மாநிலங்களிலும், இந்தி எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது. இந்திக்கு எதிராக இந்தியா எங்கும் வெடித்துக் கிளம்பும் போக்கை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ளத் தவறினால், அதன் விளைவு விபரீதமாகி விடும். கடும் விலையைக் கொடுக்க நேரிடும். திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நவம்பர் 4ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் அறவழிப் போராட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் திமுக, திக
ஏற்கனவே நவம்பர் 4ம் தேதி திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, கேஎன் நேரு உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் திராவிட இயக்கம் மற்றும் கட்சிகள் சார்பாக சார்பாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications