5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை
சென்னை: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முன் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் என்ன முடிவு எடுப்பது என்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாலை 3 மணியளவில் தொடங்கிய நிலையில் 6 மணி நேரத்தை தாண்டி கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஒவ்வொருவரின் கருத்துகளும் கேட்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலனோர் 6 தொகுதிக்கு குறைந்தால் தனித்தே போட்டியிடலாம் என சொல்லி வருகிறார்களாம்.

பலம் வாய்ந்த திமுக கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், கட்சிகள் தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் என பம்பரமாக சுழல ஆரம்பித்துள்ளன.
கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டாலும், தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி இருந்து வருகிறது. தவெக தனித்து போட்டி என்பதால் வேட்பாளர்களை மட்டுமே தேர்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. சீமான் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுக 2 கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த முறை திமுகவில் கூடுதலாக 10 கட்சிகள் கூட்டணிக்கு சேர்ந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இதனால் அந்த கட்சி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் இருந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை திமுக ஒதுக்கிய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. ஆனால் இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒத்துவரவில்லை. இதனால் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீட்டில் இறுதிபெறவில்லை. கடந்த முறையைப் போல 6 தொகுதிகளாவது வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் தான் திமுக 5 தொகுதிகளுக்கு மேல் கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று மாலை சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கிய நிலையில் தற்போது 6 மணி நேரத்தை தாண்டியும் தொடர்ந்து நீடித்து வருகிறதாம்.. நிர்வாகிகள் பலரும் ஒருங்கிணைந்த கருத்தினை கூறவில்லை என்பதால் இது நீடித்து வருகிறதாம்.
தனித்து போட்டியிடலாம்?
திமுக 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினால் நாம் தனித்து போட்டியிடுவோம் என்றும் சில நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும் சிலர் தனித்து போட்டியிட்டால் நாம் 20 தொகுதிகளில் கூட போட்டியிட முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணியில் நீடிக்கவும் கூறியிருக்கிறார்கள். 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றால் அந்த 5 தொகுதிகளில் 2 தொகுதிகள் சென்னையில் வேண்டும் என கேட்டுப்பெற வேண்டும் என சொல்கிறார்களாம்.
இதனால் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க போகிறார்கள் என்பது அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றோ அல்லது நாளையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு என்ன என்று தெரிந்துவிடும் எனவும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications