விஜய் கொளுத்திய பட்டாசு.. திமுக கூட்டணியில் வெடித்த தீபாவளி.. ரசிக்காத ஸ்டாலின்.. காங்கிரஸா இப்படி?
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைமையிலான கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு ; கூட்டணி ஆட்சி என்கிற அரசியல் அஸ்திரத்தை தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் வீசினார் விஜய். நம்மை நம்பி வந்தவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. எனவே ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு வழங்கப்படும். எங்களிடம் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும். நாங்கள் தனியாக மெஜாரிட்டி பெறுவோம். தனியாக மெஜாரிட்டி பெற்றாலும்.. எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும், என்று விஜய் அறிவித்து இருந்தார்.
தமிழக அரசியலுக்குப் கூட்டணி ஆட்சி கான்செப்ட் புதிய விசயம் என்பதால், அது குறித்த வாத-பிரதிவாதங்கள் தமிழக அரசியல் கட்சிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தின. அதேசமயம், கூட்டணி ஆட்சியின் லாப-நட்ட கணக்குகளை போட்டுப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரசின் பொதுச்செயலாளர் களில் ஒருவரான சரவணன் என்பவர், கூட்டணி ஆட்சி குறித்து திமுக தலைமைக்கு கடிதம் எழுதினார். நடப்பு ஆட்சியிலேயே அதனை நீங்கள் அமல்படுத்துங்கள் என்றும் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்தார். இந்த கடித விவகாரம் அறிவாலயத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்டாலின் ரசிக்கவில்லை: இப்படி கடிதம் எழுதியதை திமுக தலைவர் ஸ்டாலின் ரசிக்கவில்லை. காங்கிரஸ் தலைமை மீது கோபம் கொண்டிருக்கிறது அறிவாலயம். இந்த நிலையில், பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ’’காங்கிரஸ் தேசிய கட்சி. மாநில கட்சி அல்ல! எங்களின் கட்சித் தலைமை புதுடெல்லியில் இருக்கிறது.
தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும். கடிதம் எழுதியவரிடம் துணை தலைவர் சொர்னா சேதுராமன் மூலமாக விளக்கம் கேட்கப்பட்டது. கடிதம் எழுதியவர், கோரிக்கையாக வைத்தேன் ; இது எனது தனிப்பட்ட கருத்து என்று சொல்கிறார். அதனால் அவர் வைத்த கோரிக்கை காங்கிரசின் கருத்தல்ல! என்று தெளிவுப்படுத்தினார் செல்வப்பெருந்தகை.
திமுக ஆதரவு: ஆனால், செல்வப்பெருந்தகையின் இந்த விளக்கம் பற்றி காங்கிரசின் மூத்த நிர்வாகிகளிடம் குறிப்பாக திமுக ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விவாதம் கிளம்பியிருக்கிறது. செல்வத்தின் மீது சந்தேகமும் படுகிறார்கள். இது குறித்து திமுக ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரித்த போது, ’’அவரது பதில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இருக்கவில்லை. ஏனோ, பட்டும் படாமல் விளக்கம் கொடுக்கிறார்.
கூட்டணி ஆட்சியை நாங்கள் வலியுறுத்த மாட்டோம் என்று அழுத்தமாகச் செல்வப்பெருந்தகை சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் நழுவிச் செல்கிறார். இதை வைத்துக் கணிக்கும் போது, கூட்டணி ஆட்சியை இந்த பீரியடிலேயே திமுக நிறைவேற்ற வேண்டும் என்கிற ஆசை செல்வப்பெருந்தகைக்கும் இருக்கிறது என்கிற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.
அவர் நழுவிச் செல்வதைப் பார்த்தால், அப்படி ஒரு கடிதம் எழுதி தமிழக காங்கிரசின் விருப்பம் பொது வெளியில் பேசப்படட்டும் என்று அவரே சரவணனை விட்டு எழுத வைத்திருக்கலாம் என தோன்றுகிறது. இனி காங்கிரசை திமுக நம்பாது என்றே நினைக்கிறோம்’’ என்கிறார்கள். சரவணனின் கடிதம், திமுகவின் கோபம், செல்வப்பெருந்தகையின் நழுவல் விளக்கம் ஆகியவை குறித்துதான் சத்தியமூர்த்திபவனில் ஹை-லைட் விவாதங்கள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications